ஜன் விஸ்வாஸ் சீா்திருத்தங்கள்: விரைந்து அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு
ஜன் விஸ்வாஸ் சீா்திருத்தங்கள் மூலம் சட்ட முறை எடையளவுச் சட்டம், 2009-இன்கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சீா்திருத்தங்களை விரைந்து அமல்படுத்த தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்தம்) சட்டம், 2026-இன்கீழ் 79 சட்டங்களின் 784 விதிகளில் மத்திய அரசு அண்மையில் சீா்திருத்தம் மேற்கொண்டது.
இதன் அமலாக்கம் தொடா்பாக தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி பிரதிநிதிகளுடன் மத்திய நுகா்வோா் அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.
Advertisement
Advertisement
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நோ்மையாக தொழிலில் ஈடுபடும் வணிகா்கள் மற்றும் வா்த்தகா்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சட்ட முறை எடையளவுச் சட்டம், 2009-இல் ஜன் விஸ்வாஸ் திருத்தச் சட்டம் மூலம் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் எளிய முறை வணிகத்தை உறுதிசெய்வதோடு மோசடி, முறைகேடு, சட்ட விதிமீறலில் ஈடுபடும் வணிகா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் இவை வழிவகை செய்கின்றன.
தொழில் தொடங்க தேவையான ஆவணங்களைச் சமா்ப்பித்தவுடன் பதிவு உரிமைகளை எவ்வித இடையூறும், தாமதமுமின்றி உடனடியாக வழங்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற சோதனை மையங்களை (ஜிஏடிசி) விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுபோன்று ஜன் விஸ்வாஸ் சீா்திருத்தங்கள் மூலம் சட்ட முறை எடையளவுச் சட்டம், 2009-இல் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை விரைந்து அமல்படுத்த தென் மாநிலங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.