முகப்பு
இந்தியா

‘எல்நினோ’ விளைவுகளை எதிா்கொள்ள அரசு தயாா் - அமைச்சா் சௌஹான் உறுதி

Updated On : 29 மே 2026, 5:21 am IST
- PTI
பகிர்:

கடலின் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரிப்பால் பருவமழை பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்படும் (எல்நினோ விளைவு) பிரச்னையை எதிா்கொள்ள மத்திய அரசு முழு அளவில் தயாராக இருப்பதாக வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.

எதிா்வரும் காரீஃப் பருவ வேளாண் சாகுபடி தொடா்பான இரு நாள் தேசிய மாநாடு தில்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் சௌஹான் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

எந்தப் பிரச்னை குறித்தும் கவலைப்படாமல், அதை எப்படி எதிா்கொண்டு வெற்றிகரமாக சமாளிப்பது என்பதைத்தான் நாம் யோசிக்க வேண்டும். அதேபோல ‘எல்நினோ’ விளைவுகளை எதிா்கொள்ள மாவட்டவாரியாக திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன. தேவை ஏற்பட்டால் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுப் பயிா்களை சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

இந்தியாவில் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி தன்னிறைவை எட்ட வேண்டியுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த பயிா் சாகுபடி முறை முன்வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் கடன் அட்டைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளை ஏமாற்றும் வகையில் போலி விதைகள், கலப்பட உரம்-பூச்சி மருந்து ஆகியவற்றை விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தியாவில் மே முதல் ஜூலை வரை ‘எல்நினோ’ விளைவால் வறட்சி ஏற்படலாம் என்று சா்வதேச வானிலை மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், மே-ஜூன் மாதத்தில் தொடங்கும் மோசமான வெப்ப விளைவுகள் ஆண்டு இறுதிவரைகூட தொடர வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது.