சித்தராமையா ராஜிநாமா ஏற்பு.. கர்நாடக அமைச்சரவையைக் கலைத்தார் ஆளுநர்!
சித்தராமையாவின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையைக் கலைத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையைக் கலைத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ள மக்கள் பவனில் இருந்து வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தகவலின்படி, சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையை ஆளுநர் உடனடியாகக் கலைத்தார்.
இருப்பினும், அடுத்த அமைச்சரவை பதவியேற்கும் வரை சித்தராமையா முதல்வராகத் தொடர்வார் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
சித்தராமையா அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்களுக்கு டி.கே. சிவகுமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள், அமைச்சரவையில் பல மாறுதல்கள் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்தச் சூழலில், இருவரையும் சமாதானப்படுத்திய காங்கிரஸ் மேலிடம், சுழற்சி முறையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகால முதல்வர் பதவிவகிக்கும் சமரச திட்டத்தை ஏற்று, சித்தராமையா முதல்வரானார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு மேலானதைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக டிகே சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.
அதனைத்தொடர்ந்து, தில்லியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தலைமையில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.
காங்கிரஸ் மேலிட வழிகாட்டுதலின்பேரில், புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்பதற்காக வழிவிட்டு அவர் பதவியிலிருந்து விலகினார்.
2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு காலம் முதல்வராகப் பதவி வகித்த சித்தராமையா, இரண்டாவது முறையாக 2023 முதல் 2026 வரை 3 ஆண்டு காலம் முதல்வராகப் பதவி வகித்தார்.
கர்நாடகத்தில் அதிகபட்சமாக 8 ஆண்டு காலம் முதல்வராகப் பதவியில் நீடித்த வரலாற்றையும் சித்தராமையா பெற்றுள்ளார்.
Karnataka Governor Thaawarchand Gehlot on Friday accepted the resignation of Chief Minister Siddaramaiah, a day after the latter submitted his resignation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.