கர்நாடகத்தில் எத்தனை துணை முதல்வர்கள்? கார்கே பதில்!
கர்நாடகத்தின் புதிய துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சரவை குறித்து மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தது தொடர்பாக...
கர்நாடகத்தின் புதிய துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சரவை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஞாயிற்றுக்கிழமை பேசியுள்ளார்.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்தச் சூழலில், இருவரையும் சமாதானப்படுத்திய காங்கிரஸ் மேலிடம், சுழற்சி முறையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகால முதல்வர் பதவிவகிக்கும் சமரச திட்டத்தை ஏற்று, சித்தராமையா முதல்வரானார்.
Advertisement
Advertisement
இரண்டரை ஆண்டுகளுக்கு மேலானதைத் தொடர்ந்து, சித்த ராமையாவை காங்கிரஸ் தலைமை ராஜிநாமா செய்ய உத்தரவிட்டது. அதன்படி, அவர் ராஜிநாமா செய்ததால் அடுத்த ஆட்சியை அமைப்பது குறித்து கர்நாடக காங்கிரஸ் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அந்தக் குழுவின் தலைவராக டி.கே. சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், இதுவரை எந்த முன்மொழிவும் வரவில்லை. முன்மொழிவு வந்த பிறகு, எத்தனை அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும், எத்தனை துணை முதல்வர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்படும். இது குறித்த உரயாடல்கள் அனைத்தும் சட்டப்பேரவைக் குழு கூட்டத்தில் நடைபெற்றன.
இவை அனைத்தும் வரும் ஜூன் 3 ஆம் தேதிக்குப் பிறகுதான் தெரியவரும். இன்னும் 15 நாள்களில் அல்லது ஒரு மாதத்தில், மீதமுள்ள அமைச்சரவை உறுப்பினர்களை நியமிக்க உள்ளோம். ஆனால் முதல்வர் என்ன நினைக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை.
இயல்பாகவே இவர்களின் ஆட்சிக்காலம் முடிந்த பிறகும் வேறொருவர் வர வேண்டும். இப்போது நமக்கு 24 மாதங்கள் மட்டுமே இருப்பதால், மிக வேகமாகச் செயல்பட்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து வழிநடத்தக்கூடிய ஒரு தலைவரை நாங்கள் தேட வேண்டும். அவர்களுடன் ஒத்துழைக்கும் நபர்களும் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்ட பிறகே நாங்கள் இது மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.