இரண்டாக உடைந்தது சிஜேபி! உருவானது சிஜேபி-டி!
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிளவு பற்றி...
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் இருந்து விலகிய சமூக ஆர்வலர் மனிஷ் பிரம்மபத், ’கரப்பான் பூச்சி ஜனதா கட்சி - ஜனநாயகம்’ என்ற கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள ஜந்தர் - மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்திய போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக மனிஷ் பிரம்மபத் செயல்பட்டார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் சிஜேபியை பலப்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழுவை கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
அந்த குழுவில், ஜந்தர் - மந்தர் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அபிஜீத் தீப்கேவின் வீட்டுக்கு வெளியே மனிஷ் பிரம்மபத், ராகுல் பாண்டியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சிஜேபி கட்சியின் புதிய தேசிய செயற்குழுவானது, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுடன் இணக்கமாகச் செயல்படும் குழுவாக மாறிவிட்டதாக ஏற்கெனவே மனிஷ் பிரம்மபத் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில், ’கரப்பான் பூச்சி ஜனதா கட்சி - ஜனநாயகம்’ என்ற கட்சியைத் தொடங்குவதாக மனிஷ் பிரம்மபத் வியாழக்கிழமை அறிவித்தார்.
இதுதொடர்பாக விடியோ வெளியிட்ட மனிஷ் பிரம்மபத், “இளைஞர்களின் துணிச்சலால் முன்னெடுக்கப்பட்டு வெற்றிபெற்ற நாடு தழுவிய இயக்கத்தை அரவிந்த் கேஜரிவால் தன்வசப்படுத்த முயற்சிக்கிறார். அவரின் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப செயல்பட அபிஜீத் தீப்கேவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதன் விளைவாக சிஜேபி நிர்வாகக் குழுவில் ஆம் ஆத்மி கட்சியினருக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டது. ஒரு மாணவர்கூட சேர்க்கப்படவில்லை. ஏற்கெனவே இருந்த ஒரு பெண்ணைத் தவிர வேறெந்த பெண்ணுக்கு இடமளிக்கவில்லை. இஸ்லாமிய ஆண்கள், சீக்கியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. கேஜரிவால் குழுவான உருவெடுத்துள்ளார்கள்.
எல்லா இடங்களுக்கும் சென்ற சிஜேபி நிர்வாகிகள், ஜார்க்கண்ட் போராட்டத்துக்கு மட்டும் செல்லவில்லை. ஏனெனில், பாஜகவின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலம் என்பதால், அரசியல் பேரம் நடத்த திட்டமிட்டிருந்த கேஜரிவால் அவர்களை தடுத்துவிட்டார்” என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், தனது இயக்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என உறுதியளித்த மனிஷ் பிரம்மபத், வாட்ஸ் ஆப் குழு, இணையதளம் மற்றும் மிஸ்ட் கால் கொடுத்து சிஜேபி-டி கட்சியில் இணையலாம் எனத் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலரான மனிஷ் பிரம்மபத், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
CJP splits in two! CJP-D formed!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.