சிஜேபி போராட்டம்! மாணவர்களுக்கு எதிராக 10 எஃப்ஐஆர்-கள் பதிவு! என்னென்ன பிரிவுகள்?
சிஜேபி போராட்டம் தொடர்பாக தில்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்திருப்பது பற்றி...
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தொடர்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு காவல் நிலையங்களில் 10 எஃப்ஐஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கிய நிலையில், அன்று காலை ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்த முயற்சித்தனர். அப்போது சிஜேபி இளைஞர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்திய நிலையில், இருதரப்புக்கும் மோதல் ஏற்படவே காவல் துறையினர் தடியடி நடத்தினர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை காவல்துறையினர் வீசினர். இதில் இளைஞர்கள் பலரும் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
மேலும், காவல்துறை தரப்பிலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், போராட்டத்தின் போது சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக தில்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் 4 எஃப்ஐஆர்-கள், கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் 3, மந்திர் மார்க், பாரகம்பா சாலை மற்றும் கடமைப் பாதை ஆகிய காவல் நிலையங்களில் தலா எஃப்ஐஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன பிரிவுகள்?
போராட்டத்தின் போது வன்முறை செய்தல், காவல்துறை மீது கல்வீச்சு, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் தொடர்பான காரணங்களுக்காக 5 எஃப்ஐஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடிக்க 250-க்கும் மேற்பட்ட காணொலிகளை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.
நாடாளுமன்றம் கூடும் நேரத்தில் அனுமதியின்றி தடையை மீறி ட்ரோன் பறக்க விடப்பட்டதாகவும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) 2023, ஆயுதச் சட்டம் 1959 மற்றும் பொதுச் சொத்து சேதத் தடுப்புச் சட்டம், குற்றவியல் ரீதியான வன்முறையைப் பயன்படுத்துதல் தொடர்பான பிரிவு 132, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக பிரிவு 223(பி) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
CJP Protest! 10 FIRs registered against students! What are the charges?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.