பூமியிலிருந்து 36,000 கி.மீ. உயரத்தில் இஓஎஸ்-5 செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்!
ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட இஓஎஸ்-5 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது பற்றி...
ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்ட இஓஎஸ்-5 செயற்கைக்கோள் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘ஜூசாட்-1ஏ’ என அழைக்கப்படும் ‘இ.ஓ.எஸ்.-5’ பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்திலிருந்து அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்தியது.
நாட்டின் 19-வது ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டான இது, அனைத்து நிலைகளையும் வெற்றிகரமாக கடந்து, வழக்கமான குறைந்த புவி சுற்றுப்பாதைக்குப் பதிலாக பூமியில் இருந்து சுமார் 36,000 கி.மீ. உயரத்தில் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோளை நிலைநிறுத்தியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்திய துணைக் கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்படவுள்ளதால், மல்டி-ஸ்பெக்டரல் மற்றும் ஹைப்பா்-ஸ்பெக்ட்ரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலமாக இந்தியாவின் நிலப் பரப்பைத் தொடர்ந்து கண்காணித்து, புவி கண்காணிப்பு, வானிலை, பேரிடா் மேலாண்மை, வேளாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு பயனளிக்கும் வகையில் நிகழ்நேரத்துக்கு நெருக்கமான படங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள்.
இஸ்ரோவின் சாதனையைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் பதிவில், ”இது இஸ்ரோவின் மற்றொரு சிறப்பான சாதனை மற்றும் நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தருணமாகும். இஸ்ரோவுக்கும் இந்தியத் தொழில்துறைக்கும் இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மையானது, நமது விண்வெளித் திட்டத்துக்குப் புதிய வலிமையையும் பரிமாணத்தையும் சேர்ப்பதுடன், ஒட்டுமொத்த விண்வெளிச் சூழலமைப்பிலும் இந்தியாவின் திறன்களை விரிவுபடுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
EOS-5 satellite positioned at an altitude of 36,000 km from Earth!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.