விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம்: நீண்ட தேடுதலுக்கு பின் பிடிபட்டார்
கோவை மத்திய சிறையிலிருந்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்கு செவ்வாய்கிழமை விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் பெரியநாயக்கன்பாளையம் அருகே தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மத்திய சிறையிலிருந்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்கு செவ்வாய்கிழமை விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் பெரியநாயக்கன்பாளையம் அருகே தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள ரங்கம்மாள் காலனியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத்.இவரது மகன் முபாரக் அலி(22).பல்வேறு திருட்டுகளில் சம்பந்தப்பட்ட இவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அன்னூரில் நடந்த திருட்டு வழக்கு சம்பந்தமாக மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்த வேண்டியிருந்தது.
இதனையடுத்து சிறப்பு சார் ஆய்வாளர் நசீர் தலைமையிலான போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு இரவு 9 மணியளவில் மீண்டும் அவரை மத்திய சிறையில் அடைப்பதற்காக கோவைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே வரும் போது கேஸ் கம்பெனி பஸ் ஸ்டாப்பில் உள்ள டீக் கடை முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடித்துள்ளனர்,அப்போது முபாரக் அலி தப்பி ஓடிவிட்டான்.இதனால் அதிர்ச்சியுற்ற போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அருகிலுள்ள பெ.நா.பாளையம்,துடியலூர்,கோவில்பாளையம் மற்றும் கோவை மாநகர காவல்நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.அனைத்து போலீசாரும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.இந்நிலையில் என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் அவர் மறைந்திருந்தது தெரியவந்தது.அங்கு சென்ற துடியலூர் போலீசார் அவனை பிடித்தனர்.கைதி தப்பி சென்ற சம்பவம் போலீசாரிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.