கூரியர், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி: மத்திய அரசு
ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் கூரியர் நிறுவனங்கள், ஆன்லைன் நிறுவனங்கள் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
புதுதில்லி: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் கூரியர் நிறுவனங்கள், ஆன்லைன் நிறுவனங்கள் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
தேசிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். அதே நேரத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமில்லாத இடங்களில் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும் என்றும் அவா் கூறினாா்.
மேலும், வருகிற 20-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னர் நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் அறிவிக்கப்படும். அதேவேளையில் மீண்டும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஊரடங்கு உத்தரவு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதன்படி, மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இவையனைத்தும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி,
Advertisement
Advertisement
► கூரியர் நிறுவனங்கள், ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
► அச்சுக்கூடங்கள், மின்னணு ஊடகங்கள், கேபிள், டி.டி.எச் சேவைகளும் இயங்கலாம்.
► அதோபோன்ற ஐ.டி.நிறுவனங்கள், ஐ.டி. தொடர்பான சேவைகள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
► அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களும் தங்களது பணியை தொடரலாம்.
► துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் சேமிப்பு கிடங்குகள் தொடர்ந்து இயங்க அனுமதி.
► சுகாதாரப் பணியாளர்களுக்கும், ஊரடங்கு காலத்தில் சேவை புரியும் துறை சார்ந்த பணியாளர்களுக்கும் உணவகங்கள், விடுதிகள் உள்ளிட்டவை இயங்கலாம்.
► பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.