முகப்பு
தற்போதைய செய்திகள்

நடிகரின் பிறந்தநாளை அரசு அலுவலகத்தில் கொண்டாடியவருக்கு கிடைத்த மறக்க முடியாத பரிசு!

அஜித் பிறந்தநாளை அரசு அலுவலகத்தில், தன்னுடன் பணிபுரிந்தோரிடையே கொண்டாடி மகிழ்ந்த அரசு ஊழியர் ஒருவரைக் கண்டிக்கும் விதமாக, ஓராண்டுக்கு அவரது சம்பள உயர்வு தடை செய்யப்பட்டதோடு, அவர் மணி மாறுதலும்

Updated On : 16 ஆகஸ்ட் 2017, 3:17 pm IST
பகிர்:

அஜித் பிறந்தநாளை அரசு அலுவலகத்தில், தன்னுடன் பணிபுரிந்தோரிடையே கொண்டாடி மகிழ்ந்த அரசு ஊழியர் ஒருவரைக் கண்டிக்கும் விதமாக, ஓராண்டுக்கு அவரது சம்பள உயர்வு தடை செய்யப்பட்டதோடு, அவர் பணி மாறுதலும் செய்யப்பட்டுள்ளார். 

ஜூலை 7, 2017 தேதியன்று, சென்னை கார்ப்பரேஷன் சிறப்பு அதிகாரிகளின் பரிந்துரையின் படி மண்டலத் துணை ஆணையாளர் உத்தரவின் பேரில், சம்மந்தப்பட்ட அரசு ஊழியருக்கு மேற்கண்ட பணி மாறுதல் உத்தரவு மற்றும் ஓராண்டுக்கு சம்பள உயர்வு நிறுத்தப்பட்டது உள்ளிட்ட தண்டனை விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை கார்ப்பரேஷனின் கோடம்பாக்கம் கிளை அலுவலக ஊழியரான கே. ஜெயந்தி, மே 1 ஆம் தேதி, நடிகர் அஜித்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளையில் தனது சக ஊழியர்களுக்கு கேக் வழங்கினார். சில ஊழியர்கள் அவரது கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டாலும், ஊழியர்களில் ஒருவர் அந்த நிகழ்வுகளை வீடியோப் பதிவாக்கி உயரதிகாரிகளுக்கு புகாராக அனுப்பி வைத்தார். புகாரை ஒட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, விசாரணையின் போது ஜெயந்தி, நடிகர் அஜித்தின் பிறந்தநாளை, தான் பணிபுரிந்த அரசு அலுவலகத்தில், சக ஊழியர்களுடன் கொண்டாடியதை ஒப்புக் கொண்டார். இதனால், ஜெயந்தியின் தவறு நிரூபணமாகி அவருக்கு தண்டனை பரிந்துரைக்கப்பட்டது.

Advertisement

நடிகர் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக அரசு ஊழியர் ஒருவர் இவ்விதம் தண்டிக்கப்பட்டது இதுவே முதல் முறை, தனது இச்செயலுக்காக ஜெயந்தி அளித்த விளக்கத்தில், ஒரு பெண்ணாக, தனது பணியிடத்தில் தான் சந்தித்த சவால்கள் அதிகம், ஆயினும் அவற்றையெல்லாம் சமாளித்து தான் மிகச்சிறப்பாகவே பணியாற்றி வந்ததாகவும், நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் தனது அன்றைய வேலையின் செயல்திறனோ, அல்லது தனது வேலையின் மீதான அர்ப்பணிப்பு உணர்வோ எதுவும் குறையவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல தண்டிக்கப்பட்ட அரசு ஊழியரான ஜெயந்தி, 2015 ஆம் ஆண்டில் சிறந்த அரசு ஊழியருக்கான விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விஷயமாக மேலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அரசு ஊழியர் ஜெயந்திக்கு ஓராண்டுக்கு சம்பள உயர்வு நிறுத்தப்பட்டது மட்டுமல்ல கோடம்பாக்கத்திலிருந்து ஆலந்தூர் கிளைக்கு அவர் பணி மாறுதலும் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இதனால் ஜெயந்தி பெற வேண்டிய பதவி உயர்விலும் கூட தொய்வு ஏற்பட்டுள்ளது.

இத்தண்டனை குறித்துப் பேசுகையில், “அரசு அலுவலகங்களில், இனி இப்படி ஒரு தவறு அரசு நடத்தப்படக் கூடாது எனும் எச்சரிக்கையை ஏற்படுத்தும் வண்ணமாகவே நடிகரின் பிறந்தநாளை கொண்டாடிய அரசு ஊழியருக்கு இப்படி ஒரு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இம்மாதிரியான தண்டனைகளால் கார்ப்பரேஷன் நிர்வாகம் மேம்படும்” எனவும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.