FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

எரிந்தும் உயிர் பிழைத்த 150 ஆண்டுப் பழைய ஆலமரம்! ஹவாய் தீவுக்கு இந்தியா அளித்த பரிசு!

ஹவாய் தீவுகளிலுள்ள லகைனாவில் காட்டுத்தீயில் எரிந்து பின் உயிர் பிழைத்துள்ள ஆலமரம் பற்றி...

Updated On : 7 ஆகஸ்ட் 2024, 5:05 pm IST
தழைக்கும் ஆலமரம்! - AP
பகிர்:

இனி தழையாது; எரிந்தழிந்துவிட்டது எனக் கருதப்பட்ட ஒன்றரை நூற்றாண்டுப் பழைய ஆலமரம் மீண்டும் தழைத்திருக்கிறது.

ஹவாய் தீவுகளின் இரண்டாவது பெரிய தீவான மௌவியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லகைனா நகரின் பிரதான வீதியிலுள்ள 151 ஆண்டு கால ஆலமரம், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நேரிட்ட பெரும் காட்டுத்தீயில் சிக்கி எரிந்தது. எனினும், தோட்டக் கலை வல்லுநர்களின் முயற்சிகளால் உயிர் பிழைத்த இந்த ஆலமரத்தின் பகுதிகள் மீண்டும் தழைக்கத் தொடங்கியுள்ளன.

2018-ல் நிழலாறும் பயணிகள்

அப்படி என்ன இந்த ஆலமரத்துக்கு முக்கியத்துவம்?

Advertisement

Advertisement

மௌவி தீவிலுள்ள மரங்களிலேயே மிக வயதானது இந்த ஆலமரம். ஆனால், இந்தத் தீவைச் சேர்ந்தது அல்ல. தீவில் வேறெங்குமே ஆலமரம் கிடையாது. லகைனாவில் வசிப்பதற்காக முதன்முதலில் பிராட்டஸ்டன்ட் சபையினர் வந்ததன்  50-வது ஆண்டு நினைவைக் கொண்டாடும் வகையில் இந்த மரத்தைப் பரிசுப் பொருளாக இந்தியா அனுப்பிவைத்தது.

1873-ல், அமெரிக்காவின் ஆட்சிப் பகுதியாக அறிவிக்கப்படுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன், தனது அரசின் தலைநகராக லகைனாவை மன்னர் கமெகாமெகா அறிவித்த 70 ஆண்டுகளுக்குப் பின், இந்த ஆலமரம் இங்கே கொண்டுவந்து நடப்பட்டது.

ஆலமரம் - அன்றும் இன்றும் - AP

ஆண்டாண்டுகாலமாக மௌவி தீவுக்கு வந்துசெல்லும் சுற்றுலா பயணிகளால் மிகவும் விரும்பப்படுவது, நினைவுகூரப்படுவது இந்த மரம். ஆனாலும் பலருக்கு ஹவாய் மக்களின் உள்ளூர் மக்களை மண்ணைவிட்டு வெளியேற்றி, அவர்களுடைய மொழியை ஒடுக்கிய காலனி ஆட்சியின் அடையாளமும் இதே ஆலமரம்தான்.

தலைமுறை தலைமுறையாக லகைனாவின் கடலோரத்தில் மக்கள் திரள்வதற்கான இடமாகத் திகழ்ந்துவந்தது இந்த ஆலமரம். 60 அடிகளுக்கும் மேல் உயரமான, எண்ணற்ற விழுதுகளையும் கொண்ட சுமார் ஒரு ஏக்கர் பரப்பிலான இந்த மரமும் மரத்தின் நிழலும்தான் கடலோர மக்களின் இதயத்தைப் போன்றது.

தீயில் எரிந்த மரம்... - AP

பெரு மரம். எண்ணற்ற கிளைகள், கிளைகள்தோறும் பசேலென இலைகள். கிளைகளிலிருந்து இறங்கும் விழுதுகள், காலப்போக்கில் விழுதுகள் எல்லாமும் நிலத்தில் வேர் விட்டு மரங்களாக, பறவைகளின் அடைக்கலமாகவும் இருந்தது.

தீவிபத்துக்குப் பின் பார்வையிட வந்த அதிபர் ஜோ பைடன் - AP

காட்டுத்தீயின்போது என்ன நடந்தது?

2023 காட்டுத் தீயில் மரமும் மரத்தின் பெரும்பாலான கிளைகளும் கருகிப் போய்விட்டன. தீயெரிந்த வெப்பத்தில் மரத்தின் பெரும்பகுதி காய்ந்துபோய்விட்டது என்று குறிப்பிடும் மௌவி தோட்டக்கலை வல்லுநர் டுவான் ஸ்பார்க்மேன், இந்த வெப்பகம் காரணமாக மரத்தின் பாதிக்கும் மேற்பட்ட கிளைகள் செத்துப்போய்விட்டன என்கிறார். மீண்டும் அவை தழைக்கவில்லை. எனினும் நல்லவேளையாக மரத்தின் பிற பகுதிகள் தழைக்கத் தொடங்கியுள்ளன.

எவ்வாறு காப்பாற்றப்பட்டது?

உயிருடன் இருக்கும் கிளைகள் பிழைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகப்  பட்டுப் போன கிளைகள் அனைத்தும் வெட்டி அகற்றப்பட்டன. இவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக மரத்தின் பகுதிகளில் 14 உணர்திறன் சாதனங்களும் பொருத்தப்பட்டன.

சிறு சிறு குழாய்களின் வழி மரத்தின் வேர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டன. விரைவில் வேர் பிடித்து வளர வேண்டும் என்பதற்கான பல முனைப்பட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும் ஸ்பார்க்மேன் குறிப்பிடுகிறார்.

ஆலமரத்துடன் மீண்டெழும் பிரதான கடலோரம் - AP

தீயில் வேறென்ன மரங்கள் அழிந்தன?

லகைனாவில் மட்டும் சுமார் 25 ஆயிரம் மரங்கள் எரிந்துவிட்டிருக்கலாம். தோட்டங்களில் வளர்க்கப்பட்ட பழ மரங்கள் மட்டுமின்றி, ஹவாய் பண்பாட்டின் அடையாளமான, மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்த உலு அல்லது ரொட்டிப்பழ மரங்களும்கூட எரிந்துவிட்டன. உலு மரங்களில் இரண்டுதான் மீதியிருக்கின்றன.

காலனி ஆதிக்கமும் வணிகரீதியிலான வேளாண்மை, சுற்றுலா போன்றவையெல்லாம் வருமுன் லகைனாவில் ஆயிரக்கணக்கில் உலு மரங்கள் இருந்தன.

லகைனாவில் மீண்டும் மரங்களை வளரச் செய்வதற்காக, ஸ்பார்க்மேன் உருவாக்கியுள்ள ட்ரீகவரி என்ற அமைப்பின் மூலம், வளர்ப்புப் பண்ணைகளை வைத்து மரக்கன்றுகளை வளர்த்து, இவர்கள் மக்களுக்கும் வழங்குகின்றனர்.

தீயில் எரிந்த ஒன்றரை நூற்றாண்டுப் பழைய ஆலமரம் மீண்டும் உருக்கொண்டு தழைத்துவருவது லகைனா நகர மக்களிடையே, குறிப்பாக, ஹவாய் தீவுகளுக்குச் சுற்றுலா பயணிகளிடையே பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது.

தமிழில் - ததாகத்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments