புதுப் பிரச்னை! புதையும் சென்னை நகரப் பகுதிகள்! பனையூருக்கும் ஆபத்தா?
சென்னையில் போரூர், பனையூர் உள்ளிட்ட பகுதிகள் நிலத்துக்குள் அழுந்திக்கொண்டிருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல்.
சென்னையில் போரூர், சேப்பாக்கம், மதுரவாயல், கொடுங்கையூர், பனையூர், விமான நிலையம் உள்ளிட்ட சில பகுதிகள் ஆண்டுதோறும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்கு பூமிக்குள் புதைந்து வருவதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
இந்த பகுதிகளின் நிலத்தடியில் உள்ள மென்மையான களிமண், வண்டல் மண் மற்றும் மணல் ஆகியவற்றின் படிப்படியான சுருக்கமும், அப்பகுதியின் புவியியல் சூழலும், நகரமயமாதலுக்கான உள்கட்டமைப்புகளின் அழுத்தமும் இணைந்து, இப்பகுதிகளை ஆண்டுதோறும் 15 மி.மீ. அளவுக்கு மண்ணில் புதையும் நிலைக்கு இட்டுச் செல்கின்றன.
மேற்குறிப்பிட்ட பகுதிகளிலேயே, போரூர் - மதுரவாயல் இடையேயான பகுதிகள்தான் மிக மோசமான பாதிப்பை சந்திக்கின்றன. மாறிவரும் சூற்றுச்சூழல் காரணமாக கடல் மட்டம் உயர்ந்துவரும் அதே நேரத்தில், நிலத்துக்குள் அழுத்தப்படும் நகரங்களுக்கு வெள்ள பாதிப்புகள் நேரிடும் அபாயம் அதிகரித்துள்ளன.
Advertisement
Advertisement
இந்த அபாயப் பகுதிகளில் சோளிங்கநல்லூர், சித்தாலப்பாக்கம், அடையாறு, தொண்டையார்பேட்டை, கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளும் பல்வேறு காரணங்களால் தாங்களாகவே வந்து இணைந்துள்ளன.
தொடர்ந்து, இந்த பாதிப்பு மேலும் சில பகுதிகளுக்கும் ஏற்படலாம், இதில் தி.நகர், மாதவரம் பகுதிகளும் தப்ப முடியாது என்கின்றன ஆய்வுகள்.
இந்த ஆய்வில் கிடைத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால், நிலப்பரப்பு பூமிக்குள் அழுந்திப்போகும் நிகழ்வானது, முந்தைய ஆண்டுகளைவிடவும் ஐந்து மடங்கு வேகத்தில் நிகழ்வதாகவும், அதற்கு நேர்மாறாக, கடல் மட்டம் உயர்வது ஆண்டுக்கு 2.8 மி.மீ. ஆக உயர்ந்திருப்பதாகவும் கூறுவதுதான்.
கடந்த 2016 - 24ஆம் ஆண்டு வரை சென்டினெல் -1 செயற்கைக்கோள் ரேடார்களின் புகைப்படங்களை அடிப்படையாக வைத்து, பல்வேறு தரவுகளையும் ஆராய்ந்து ஐஐஎஸ்இஆர் மொஹாலி நடத்திய ஆய்வின் முடிவுகளில்தான் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
இதில் ஒரே ஒரு நல்ல தகவலும் கிடைத்திருக்கிறது, அதுதான் நீர்மட்ட நிலவரம், சென்னையின் பல பகுதிகளில் பூமிக்கு அடியில் இருக்கும் நீர்மட்ட நிலவரம் கிட்டத்தட்ட அதே நிலையில் நீடித்திருக்கிறது என்பதே. எனவே, நிலத்தடி நீர்மட்டம், நிலப்பரப்பு புதைந்துபோகக் காரணமல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதைந்துவரும் நகரங்களில் போரூர் 15 மி.மீ. என்ற அளவுடன் முதலிடத்திலும், பனையூர் ஆண்டுக்கு 8 மி.மீ. அளவுடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, பெரம்பூர், பாலவாக்கம் போன்ற பகுதிகள், கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட சற்று உயர்ந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.
இந்த தாக்கங்களால், எதிர்காலத்தில் அதிகப்படியான வெள்ள பாதிப்புகள் நேரிடலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, இயற்கை மாறுபாடுகளை கவனத்தில் கொண்டு, அதனை சரி செய்யும் வகையில் பல திட்டமிடல்களை அரசுகள் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
A research report indicates that areas in Chennai, including Porur and Panaiyur, are sinking into the ground.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.