முகப்பு
தற்போதைய செய்திகள்

‘எந்நேரமும் வாட்ஸ் அப்லயே இருக்கா... இவளை என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது!’ தொடரும் வாட்ஸ் அப் விபரீதங்கள்!

மணப்பெண், வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவளிக்கிறார் என்பதெல்லாம் சும்மா! திருமணத்தை நிறுத்தியதின் உண்மையான நோக்கம் அவர்கள் அதிகப்படியாகக் கேட்ட 65 லட்ச ரூபாய் வரதட்சிணைப் பணத்தை பெண் வீட்டார்

Updated On : 10 செப்டம்பர், 2018 at 1:44 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:35 PM

உத்தரப் பிரதேசம் அமோராவைச் சேர்ந்த மணமகன் ஒருவர் திருமண நாளன்று தனக்காகக் காத்திருந்த மணமகளை, ‘ஐயே... அந்தப் பொண்ணு எந்நேரமும் வாட்ஸ் அப்லயே குடியிருக்கறா! என்னால அவளைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது’ என்று குற்றம் சாட்டி திருமணத்திற்காக திட்டமிடப்பட்டிருந்த இடத்திற்கே செல்லாமல் தவிர்த்து நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திருக்கிறார். இது மணமகள் வீட்டாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

உத்தரப் பிரதேசம் நெளகாகான் சதத் கிராமத்தைச் சார்ந்த மணப்பெண் தன் குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினருடன் கடந்த புதன்கிழமை அன்று மணமகனுக்காக காத்திருந்த நேரத்தில் மணப்பெண்ணின் தகப்பனார் மணமகன் வீட்டாரை தொலைபேசியில் அழைத்து விவரம் கேட்டிருக்கிறார். அப்போது மணமகன் வீட்டார் ‘உங்கள் பெண் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் இந்தத் திருமணத்தை நிறுத்தி விட்டோம்’ என அறிவித்திருக்கிறார்கள். பெரும் பொருட்செலவில் தொடங்கப்பட்ட திருமண ஏற்பாடுகளை வெறும் அலைபேசி அழைப்பில் நிறுத்தி விட முடியுமா? என்று அதிர்ந்து போன மணமகள் வீட்டார்... மணமகன் வீட்டாரின் இந்த அவமதிப்பால் கொதித்தெழுந்து அவர்கள் மீது காவல்துறையில் திருமணம் நிறுத்தப்பட்டது தொடர்பாகப் புகார் அளித்தனர். 

மணப்பெண், வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவளிக்கிறார் என்பதெல்லாம் சும்மா! திருமணத்தை நிறுத்தியதின் உண்மையான நோக்கம் அவர்கள் அதிகப்படியாகக் கேட்ட 65 லட்ச ரூபாய் வரதட்சிணைப் பணத்தை பெண் வீட்டார் தரவில்லை என்பதே திருமணம் நிறுத்தப்பட்டதின் உண்மையான காரணம் என்று கூறி மணப்பெண்ணின் தகப்பனார் உரோஜ் மெஹந்தி மணமகன் வீட்டார் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார். அதையே காவல்துறையினரிடம் அவர் புகாராகவும் அளித்திருக்கிறார்.

Advertisement

ஃபகீபுராவைச் சேர்ந்த ஹுமார் ஹைதரின் மகனுக்குத் தன் பெண்ணை மணமுடித்துத் தருவதாக திருமணம் நிச்சயித்திருக்கிறார் மெஹந்தி. திருமண நாளன்று மணமகள் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்காக காத்திருந்திருக்கின்றனர். அப்போது அவர்கள் வரத் தாமதம் ஆகிக் கொண்டே இருக்கவே விஷயம் அறிந்து கொள்ள மெஹந்தி தொலைபேசியில் அழைத்த போது தான்... மாப்பிள்ளை வீட்டார் தாங்கள் இத்திருமணத்தை நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர். அதையும் கூட அவர்களாகவே தெரிவிக்கவில்லை. தாமதத்தின் காரணமாக மணப்பெண்ணின் தந்தை அழைத்த பிறகு தான் திருமணத்தை நிறுத்திய விவகாரமே வெளியில் வந்திருக்கிறது.

காவல்துறை விசாரணையின் போது அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த மணமகன் தரப்பினரோ, ‘ஆம் நாங்கள் தான் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினோம், காரணம் மணப்பெண் எந்நேரமும் வாட்ஸ் அப்பில் தான் குடியிருக்கிறார். எந்த அளவுக்கு என்றால் திருமணம் நெருங்கும் வேளையில் கூட அவர் மணமகனின் பெற்றோரான எங்களுக்கு வாட்ஸ் அப் செய்திகளை அனுப்பும் அளவுக்கு அதில் அடிமையாகிக் கிடக்கிறார். இந்தப் பழக்கம் எங்கள் குடும்பத்துக்கு ஒவ்வாதது. எனவே அந்த மணப்பெண் வேண்டாம். எனத் தாங்கள் கருதியதாகத் தெரிவித்துள்ளனர்.

திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதன் உண்மையான காரணம் என்னவாக இருக்கக் கூடும்?! என தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.