FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காதலர் தினம்

காதல் என்பது எது வரை?

இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இப்படியும் ஒரு நாளை இங்கே யாரும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று இதைப் பற்றி எழுதாதவர்களோ பேசாதவர்களோ இல்லை.

Updated On : 13 பிப்ரவரி 2021, 12:15 pm IST
பகிர்:

இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இப்படியும் ஒரு நாளை இங்கே யாரும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று இதைப் பற்றி எழுதாதவர்களோ பேசாதவர்களோ இல்லை.

இந்த வாட்ஸ்ஆப், முகநூல் காலத்தில்கூட உலகில் மிக அதிக அளவில் வாழ்த்து அட்டைகள் விற்பனையாகும் இரண்டாவது சீசன் இது என்று கூறப்படுகிறது.
இப்போது உலக அளவில் கொண்டாடப்படும் சில நாள்களில் இதுவும் ஒன்று. பிப்.14 காதலர் தினம்.

ஆண் - பெண் உறவு உயிர்த்திருக்க வேண்டும் என்பதற்காக உயிர் துறந்த பாதிரியாரின் பெயரால் வாலன்டைன் டே என்றழைக்கப்படுகிறது.

சாதி, மதம், இனம் மொழி இவற்றையெல்லாம்  பார்த்து வருவதல்ல காதல், அன்பை மட்டுமே மையமாகக் கொண்டு ஏற்படும் மாற்றமே காதலாகிக் கனிகிறது என்கின்றனர் இன்றைய இளம் வயதினர் (மட்டும்).

இந்த நாளில் தனக்குப் பிரியமானவரிடம் ஆண்டு முழுவதும் கொண்டுள்ள தன் அன்பை (காதலை) வெளிப்படுத்துகின்றனர். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் தங்களுக்குள் நினைவுப் பரிசுகளை வழங்கி மகிழ்கின்றனர்.


இந்த நாளில் அவர்கள் அணியும் ஆடையின் நிறத்துக்குக்கூட அர்த்தம் கூறுகின்றனர்.

பச்சை நிறத்தில் அணிந்திருந்தால் காதலுக்கு சம்மதம். நீல நிறத்தில் அணிந்திருந்தால் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. சிவப்பு நிறத்தில் அணிந்திருந்தால் காதலுக்கு எதிர்ப்பு, கறுப்பு நிறத்தில் அணிந்திருந்தால் காதலில் தோல்வியுற்றவர்கள்... இப்படியெல்லாமும் இருக்கிறதாம்.

காதல் அல்லது நட்பை வளர்க்கும் எந்த ஜோடியைக் கேட்டாலுமே அனைவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகத்தான் இதைக் கொண்டாடுகிறோம். ஆனால் இதற்குக்கூட சில அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்  என்றுதான் கூறுகின்றனர்.

மேலும் படிக்க.. காதலர் தினம் ஒரு நாள் அல்ல; ஒரு வாரக் கொண்டாட்டம்!

வேலைக்குச் செல்லும் ஆணோ அல்லது பெண்ணோ காதலித்தால் முதலில் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் வேறு வழியின்றி அவர்களே முன்வந்து திருமணம் செய்து வைக்கின்றனர்.

இதனால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் எங்களைப் பற்றிய பெற்றோர்களின் எதிர்காலக் கனவைச் சிதைத்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு இருக்கிறது என்றனர்  காதல் மணம் புரிந்த ஒரு ஜோடி.

Advertisement

Advertisement


பெரும்பாலும் நாம் பார்க்கும் இடங்களிலெல்லாம் காதல் கும்பல்களில் கல்லூரி மாணவர்கள் மாணவியர்கள்தான் அளவில் அதிகம். சில மாணவிகள் அல்லது வேலை பார்க்கும் பெண்கள், வேலையற்ற இளைஞர்கள். வேலை பார்க்கும் இளைஞர்கள். வீட்டு்க்குத் தெரியாமல் வந்த இளம் பெண்கள். இப்படி எந்தவித காம்பினேஷனிலும் பொருத்திவராமல் ஜோடிகள் பலவிதம்.

'இல்லை, நாங்கள் வெறும் நண்பர்கள்தான். காதலர்கள் அல்ல. சும்மா வந்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்கின்றனர் தனியே யார் கண்ணிலும் படாத இடத்தில் அமர்ந்திருக்கும் சில ஜோடிகள் (கல்லூரிக் காலம்)

பள்ளி, கல்லூரிப் பருவத்தில் உள்ளவர்கள் படித்துக்கொண்டிருக்கும்போது சொல்லிக்கொள்ளும் காதல், வெறும் பொழுதுபோக்காகத்தான் இருக்கிறது.
பல நேரங்களில் வேலை கிடைத்ததும் அல்லது இடம் மாறியதும் காதலும் மாறிப்போய் விடுகிறது.

இதனால் இருதரப்பிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதில் நூற்றுக்கு ஒரு சதவீத காதல்தான் கடைசி வரை சென்று திருமணத்தில் முடிகின்றது என்று கல்லூரி ஆசிரிய வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

போரில் மட்டுமல்ல, காதலிலும் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். ஆதலினால் காதலிக்கலாம் குற்றமில்லை என்ற மனோபாவம்தான் இளைஞர்கள் பலரிடமும்.

ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்துக் கேட்கத் தொடர்பு கொண்டோம், 'அதுங்களுக்குதான் அறிவில்லை. டி.வி., சினிமா, கண்ட, கண்ட புத்தகங்களைப் படித்து, விடியோக்கள் பார்த்துச் சீரழிகிறார்கள். இல்லாத கருமத்துக்கு செல்போன், வாட்ஸ் ஆப், முகநூல் என்றெல்லாம் வேறு. இதுல அன்லிமிடெட் பேக்கேஜ்ல டேடா கனெக்சன் வேறு. உருப்படியா வேறு ஏதாவது வேலையிருந்தால் பாருங்கள்'

என்றாலும் ஒவ்வோராண்டும் இந்த நாளைப் புதிது புதிதாகக் காதலர்கள் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் பெரும்பாலும் ரகசியமாக அல்லது ரகசியம் என நினைத்துக்கொண்டு ஊரறிய.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments