குழந்தைகள் மீது கார் தாக்குதல்: குற்றவாளிக்கு மரண தண்டனை!
சீனாவில் பொதுமக்களின் மீது கார் தாக்குதல் நடத்திய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைப் பற்றி...
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் பள்ளிக்கூடத்தின் வாசலில் நின்றுக்கொண்டிருந்த, குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் மீது கார் தாக்குதல் நடத்திய நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
ஹுனான் மாகாணத்தின் சாங்டே நகரத்தில் கடந்த நவ.19 அன்று ஹுவாங் வென் என்ற நபர், அங்குள்ள பள்ளிக்குடத்தின் வாசலில் நின்றுக்கொண்டிருந்தவர்களின் மீது தனது காரை செலுத்தி தாக்குதல் நடத்தினார். இதில் 18 குழந்தைகள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலை நடத்திவிட்டு காரை விட்டு கீழே இறங்கிய ஹுவாங் அங்கிருந்த மற்றவர்களையும் ஆயுதத்தினால் தாக்கியதாக கூறப்படுகிறது.
Advertisement
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவரிடம் சீன காவல்துறை நடத்திய விசாரணையில் முதலீடு செய்த பணத்தை இழந்தது, குடும்பத் தகராறு ஆகியவற்றினால் ஏற்பட்ட விரக்தியினால் அவர் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவருக்கு அந்நாட்டு நீதுமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இருப்பினும், அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மற்றொரு குற்றத்தை செய்யவில்லை என்றால் அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு சில நாள்கள் முன்பு சீனாவில், மனைவியுடன் விவாகரத்து ஆனதினால் கோவமடைந்த நபர் ஒருவர் பொதுமக்களின் மீது கார் தாக்குதல் நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
சமூதாயத்தின் மீது தனி நபருக்கு ஏற்படும் வன்மத்தின் காரணமாகவே இதுப்போன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.