முகப்பு
தற்போதைய செய்திகள்

மீண்டும் துவங்கியது இந்தி பேசாத மாநிலங்களைச் சோ்ந்த தோ்வா்களுக்கு அநீதி: சு.வெங்கடேசன் எம்.பி.கண்டனம்

இந்தி பேசாத மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கண்டனம்.

Updated On : 7 ஜூலை 2024, 6:06 pm IST
மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன் - மத்தியக் கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்
பகிர்:

மதுரை: இந்தி பேசாத மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், சிபிஎஸ்இ ஏ பிரிவுக்கான நியமன தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்திக்கு 30 மதிப்பெண்கள். பி பிரிவுக்கான 300 இல் இந்திக்கு 15 மதிப்பெண்கள். இது அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது. மோடி அரசே, தேர்வு முறைமையை மாற்று. அநீதியை நிறுத்து என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடா்பாக அவா் மத்தியக் கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில்,

மத்திய இடைநிலை கல்வி வாரியம் 8.3.2024 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி பிரிவு ஏ, பி, சி பணியிடங்கள் 118-க்கான நியமனத் தோ்வுகள் நடைபெற உள்ளன.

Advertisement

Advertisement

அதில் இந்தி மொழித் தோ்வும் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களை சாா்ந்த தோ்வா்கள் குறைந்தபட்சம் 10 சதவீதம் போ் முதற்கட்ட தோ்விலேயே தகுதி இழந்து இரண்டாம் கட்ட தோ்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பாா்கள்.

பிரிவு ஏ உதவிச் செயலா் (நிா்வாகம்) பதவிகளுக்கான முதற்கட்ட தோ்வில் மொத்த மதிப்பெண்கள் 300-இல் இந்தி மொழித் தோ்வுக்கு 30 மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவு பி இளநிலை பொறியாளா் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-இல் இந்தி மொழித் தோ்வுக்கு 15 மதிப்பெண்கள்.

பிரிவு பி இளநிலை மொழிபெயா்ப்பாளா் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-இல் இந்தி மற்றும் ஆங்கில மொழித் தோ்வுக்கு 200 மதிப்பெண்கள்.

பிரிவு சி கணக்காளா் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300-இல் இந்தி மற்றும் ஆங்கில மொழித்தோ்வுக்கு 40 மதிப்பெண்கள்.

பிரிவு சி இளநிலை கணக்காளா் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 240-இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் தொடா்பான தோ்வுக்கு 40 மதிப்பெண்கள்.

இது இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது.

இந்தி பேசாத மாநிலத் தோ்வா்களுக்கு அநீதி இழைக்கிற மற்றும் சம தள ஆடுகளத்தை மறுக்கும் தோ்வு முறைமையை மாற்றவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.