FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுகவினரை விமர்சிப்பவர்களை மட்டும் கைது செய்வது சர்வாதிகாரத்தின் உச்சம்: அண்ணாமலை

திமுகவினரை விமர்சிப்பவர்களை மட்டும் கைது செய்வது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Updated On : 12 ஜூலை 2024, 1:05 pm IST
கோப்புப்படம்
பகிர்:

திமுகவினரை விமர்சிப்பவர்களை மட்டும் கைது செய்வது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

பல ஆண்டுகளுக்கு முன்பு யாரோ எழுதிய பாடலை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மேடையில் பாடினார் என்பதற்காக அவரைக் கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. அத்தோடு நில்லாமல், அந்தப் பாடலில் இடம் பெற்ற வார்த்தைக்காக, அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அதே வார்த்தையைப் பலமுறை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அப்போதெல்லாம் தவறாகத் தெரியாதது, தற்போது மட்டும் எப்படித் தவறானது என்பதை, வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாவது, தமிழக காவல்துறை ஆலோசித்திருக்கவேண்டும்.

தினமும் கொலை, கொள்ளை என, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தத்தளித்து வரும் தமிழகத்தை, சீரான பாதையில் கொண்டு செல்ல எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், சமூக வலைத்தளங்களிலும், பொதுமேடைகளிலும் திமுகவினரை விமர்சிப்பவர்களை மட்டும் கைது செய்வது சர்வாதிகாரத்தின் உச்சம்.

பட்டியல் சமுதாயத்தைத் தவறாகப் பேசினார் என்று சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறை, பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த ஒரு அரசு அதிகாரியை, தகாத வார்த்தைகளால் திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதோ, பட்டியல் சமுதாய மக்கள் பிரதிநிதி ஒருவரை, பொது மேடையில் வைத்து சமுதாயத்தை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் பொன்முடி மீதோ, என்ன நடவடிக்கை எடுத்தது?

போலி சமூக நீதி பேசி ஊரை ஏமாற்றும் திமுக, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்காக பட்டியல் சமூக மக்களைப் பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும் என்றும், சாட்டை துரைமுருகன் மீது தொடர்ந்துள்ள போலி வழக்கைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

உண்மையாகவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பட்டியல் சமூக மக்கள் மீது அக்கறை இருந்தால், மூச்சுக்கு முந்நூறு முறை, நான் கருணாநிதியின் மகன் என்று கூறிக்கொள்ளும் அவர், சாட்டை துரைமுருகன் பேசிய அதே வார்த்தையைப் பயன்படுத்திய அவரது தந்தை மறைந்த கருணாநிதி சார்பாக மன்னிப்பு கேட்பாரா? என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments