முகப்பு
தற்போதைய செய்திகள்

கள்ளச்சாராய மரணம்: முதல்வர் பதவி விலகவேண்டும் - இபிஎஸ்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகவேண்டும்.

Updated On : 20 ஜூன், 2024 at 10:19 AM
பகிர்:

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து மருத்துவமனைகலில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பெண் உள்பட 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பழ வகைகளை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனை வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

தமிழகத்தில் அரசு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை. சட்டம்-ஒழங்கு சீர்கெட்டு விட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராய விற்பனையைத் தடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ். பி. ஆகியோரின் பொறுப்பின்மையால் கள்ளச்சாராயம் குடித்து 130-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில் 5 பெண்கள் உள்ளிட்ட 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.

காவல்நிலையம் பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. எங்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில், ஆளும்கட்சியை சேர்ந்த அதிகாரமிக்கவர்கள் இந்த சம்பவத்திற்கு பின்புலமாக இருக்கின்றனர். இது கொந்தளிப்பபை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சிகிச்சையில் அதிகமானோர் இருக்கின்றனர். இதுவரை சிபிசிஐடி விசாரணையில் யார் மீது நடவடிக்கை எடுத்தார்கள் என தெரியவில்லை.

கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்திகுமார் தொலைபேசி வாயிலாக 5 நாள்களுக்கு முன்னரே காவல் கண்காணிப்பாளரிடம் கள்ளச்சாராயம் குறித்து புகார் கூறியுள்ளார். ஆனால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் விஷத்தை முறிக்கக் கூடிய மருத்துகள் இல்லாததால்தான் உயிரிழப்பு எண்ணிகை அதிகரித்துள்ளது. மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சியில் உள்ள திமுக-வுக்கு மக்கள் குறித்து எந்தவித கவலையும் இல்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கான கல்விச்செலவை அதிமுக ஏற்கும் என்றார் எடப்பாடி கே. பழனிசாமி.

பேட்டியின் போது, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம்,விஜயபாஸ்கர்,கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ குமரகுரு மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.