டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற்றது.
அரையிறுதிக்கு தகுதிப் பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான சூப்பர் 8 ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிபட்சமாக ராஸ்டன் சேஸ் 52 (42), கைல் மேய்ர்ஸ் 35 (34) ரன்கள் எடுத்தனர். 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குவின்டன் டி காக் 12 (7), ரீசா ஹென்ட்ரிக்ஸ் 0 (1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இடையில் மழை குறுக்கிடவே ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட்டன. அதன்படி டிஎல்எஸ் விதிமுறைப்படி தென்னாப்பிரிக்கா அணிக்கு 17 ஓவர்களில் 123 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும் அந்த இலக்கை துரத்த தென்னாப்பிரிக்கா திணறியது. பிறகு ஒருவழியாக 16.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
அதேசமயம் மேற்கிந்தியத் தீவுகள் உலக்கோப்பை சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறி இருக்கிறது.