மருத்துவருக்கு கத்திக்குத்து: விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவு!
மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக முதல்வர்.
சென்னை மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, மருத்துவமனைக்கு வந்த ஒரு இளைஞர் கொடூரமான முறையில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிகிச்சைக்கு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இதையும் படிக்க: சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து!
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது.
இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.