உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் கோட்டை வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் சேட்டு என்கின்ற மஹாதிர் முஹமத் (36). தாதுபாய்குட்டை பகுதியில் உதிரிபாக கடை வைத்துள்ளார். மேலும் குகை ஆற்றோர வடக்கு தெருவில் ஜிம் ஒன்றையும் நடத்தி வந்தார்.
நேற்று முன்நாள் மாலை சுமார் 7 மணியளவில் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட இவர், அனைவரும் உடற்பயிற்சி செய்துவிட்டு சென்ற நிலையில் இவர் மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, உடற்பயிற்சி நிலையத்திலேயே நீராவி குளியலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் இரவு 9 மணியளவில், அவரது தாய் செல்ஃபோனில் அழைத்துள்ளார். அவர் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், ஜிம்முக்கு சென்று பார்த்தபோது, குளியல் அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
கண்ணாடியால் செய்யப்பட்ட குளியல் அறையை உடைத்து, மஹாதிர் முகமதுவை மீட்டபோது காதில் ரத்தம் கசிந்து இருப்பதைப் பார்த்த குடும்பத்தினர், உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதணை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டுச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினர் மற்றும் காவல் உதவி ஆணையாளர் ஹரிசங்கரி ஆகியோர் ஜிம்மில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இநநிலையில் முகதீர் முகமதுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளதும், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.