கிரீஸ் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து!
கிரீஸ் நாட்டு கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைப் பற்றி...
கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி அருகிலுள்ள துருக்கி நாட்டின் கடற்கரையிலிருந்து அகதிகள் படகு ஒன்று இன்று (ஏப்.3) அதிகாலை பயணித்துள்ளது. அப்போது, திடீரென அவர்கள் பயணித்த படகு தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இதனைத் தொடர்ந்து, நடுக்கடலில் உயிருக்கு போராடிய 23 பேரை கிரீஸ் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படகில் பயணித்த அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் அவர்களது எண்ணிக்கைக் குறித்தும் எந்தவொரு தகவலும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
மேலும், அகதிகள் யாரேனும் மாயமானார்களா என்று விசாரணை நடைபெற்று வரும் சூழலில், விபத்து நடந்த கடல் பகுதியில் 3 கடலோரக் காவல் படையின் கப்பல்கள், விமானப் படையின் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
அகதிகள் பயணம் செய்த கடல் பகுதியின் வானிலையில் பெரிய அளவில் மாற்றமில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களது படகு கவிழ்ந்ததற்கான காரணம் என்னவென்பது தெளிவாவில்லை.
முன்னதாக, மோதல்கள் மற்றும் வறுமையிலிருந்து தப்பித்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையும் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த மக்கள் துருக்கியின் கடல்கரைகளின் வழியாக கிரீஸ் நாட்டின் தீவுகளை நோக்கி காற்று ஊதப்பட்ட படகுகள் மூலமாக ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இதைத் தடுக்க கிரீஸ் அரசு கடலில் ரோந்து பணிகளை அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு சட்டவிரோத கடத்தல் கும்பல்கள் தங்களது நடவடிக்கைகளை அந்நாட்டின் தெற்கு பகுதிகளை நோக்கி மாற்றியமைத்துள்ளன. இதனால், வட ஆப்பிரிக்காவிலிருந்து மிகப் பெரிய கப்பல்கள் மூலம் பயணித்து மக்கள் தெற்கு கிரீஸ் பகுதிகளில் தஞ்சமடைவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!