பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு முதல்வர் பரிசு!
அசாமில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு முதல்வர் பரிசு வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
வடகிழக்கு மாநிலமான அசாமில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவருக்கு முதல்வர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் சிறந்த குடிமக்களுக்கு அசாமிய புத்தாண்டான ரொங்காலி பிஹு பண்டிகையை முன்னிட்டு முதல்வர் சார்பில் கமோசா என்றழைக்கப்படும் பாரம்பரிய தாவணி அல்லது துண்டு பரிசாக வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், 2025-ம் ஆண்டிற்கான பரிசு பெறுவோர் பட்டியலில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய லக்ஷ்மிபூர் மாவட்டத்தின் பொசகோன் கிராமத்தைச் சேர்ந்த சிதா தாஸ் என்பவரின் பெயரும் இடம் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்.2 அன்று மாலை முதலமைச்சர் ஹிமாந்தா விஸ்வாஸ் சர்மாவின் சார்பில் அவரது கிராமத் தலைவரினால் வழங்கப்பட்ட இந்தப் பரிசை சிதா தாஸ் பெரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும், இந்தப் புகைப்படங்கள் உள்ளூர் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், முதல்வர் பரிசின் பட்டியலில் சிதா தாஸின் பெயர் இடம்பெற்றது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியவில்லை எனவும் வழங்கப்பட்ட உத்தரவை மட்டுமே அவர்கள் பின்பற்றியதாகவும் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தொலைக்காட்சிகள், இன்வெர்டர் மற்றும் வாகனங்களின் பேட்டரிகளை திருடியதற்காக சிதா தாஸின் மீது கடந்த 2016-ம் ஆண்டு முதல் 4 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.