ஸ்ரீநடராஜர் கோயிலில் உற்சவ ஆச்சாரியார் கே.சிவாநாத் தீட்சிதரால் ஏற்றப்பட்ட ரிஷபக் கொடி 
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வியாழக்கிழமை(டிச.25) கொடியேற்றம் தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வியாழக்கிழமை(டிச.25) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி ஆருத்ரா தரிசனம், ஆனித் திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு திருவிழாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, நிகழாண்டு மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து வியாழக்கிழமை காலை 8 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் கே.சிவாநாத் தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதைத் தொடா்ந்து, 10 நாள்கள் பஞ்ச மூா்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. 2026 ஜனவரி 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தோ்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனையும் நடைபெறுகின்றன.

ஜனவரி 3-ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அன்று காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்திகள் வீதிஉலா வந்த பின்னா், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகின்றன.

ஜன.4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், ஜன.5-ஆம் தேதி திங்கள்கிழமை ஞானப்பிரகாசர் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் குழுச் செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச் செயலாளர் சிஎஸ்எஸ்.வெங்கடேச தீட்சிதர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

உற்சவம் நடைபெறும் 10 நாள்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது.

Flag hoisting ceremony held at Chidambaram Nataraja Temple. A large number of devotees participated...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

ஏஐ உச்சி மாநாடு! இந்தியப் பயணத்தை நிறைவு செய்தார் ஸ்பெயின் அதிபர்!

இந்தியாவுக்கு அச்சுறுத்தலா ஜிம்பாப்வே?: சேப்பாக்கத்தில் மோதல்! | Super 8 | T20 World Cup |

திமுக கூட்டணியில் தேமுதிக.. ஒரே வரியில் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி!

SCROLL FOR NEXT