9 ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து! சிறுவன் கைது!
ஒடிசாவில் சக மாணவனைக் கத்தியால் குத்திய சிறுவன் கைது செய்யப்பட்டதைப் பற்றி..
ஒடிசா மாநிலம் பாலாசோரில் 9 ஆம் வகுப்பு மாணவனைக் கத்தியால் குத்திய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
அம்மாநிலத்தின் தெமூரியா கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் மண்டல் எனும் சிறுவன் அப்பகுதியிலுள்ள பள்ளிக்கூடத்தில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்தான். கடந்த ஜன.6 அன்று நடைபெற்ற ஊர் திருவிழாவின்போது அவனுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சக மாணவன் ஒருவனுக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (டிச.7) காலை டாஹாமுண்டா நோடல் உயர்நிலைப் பள்ளியின் அருகிலுள்ள பாலத்தில் பள்ளியை நோக்கி ஆனந்த் வந்துக்கொண்டிருந்தான். அப்போது, அந்த பாலத்தில் காத்துக்கொண்டிருந்த அந்த சிறுவன் ஆனந்த் மண்டலின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான்.
Advertisement
இதையும் படிக்க: மலப்புரம்: தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை; மிரண்டு ஓடிய 21 பேர் காயம்!
இதனைத் தொடர்ந்து, ஆனந்தின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு உடனடியாக கர்மாதா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனது உடல் நிலை தொடர்ந்து மோசமானதினால் அவன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த குற்றத்திற்கு பயன்படுத்திய கத்தியை கால்வாயில் வீசிவிட்டு தப்பியோடிய சிறுவனைப் பிடித்த பொது மக்கள் அவனை அப்பகுதியிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர், அங்கு விரைந்த காவல் துறையினர் அந்த சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தினால் அவர்களது பள்ளிக்கூடத்தில் நேற்று (ஜன.7) நடைபெறவிருந்த ஆண்டு விழா ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.