சாதி ரீதியான படங்கள் அந்த காலத்தில் இருந்தே வந்து கொண்டிருக்கின்றன என்று நடிகர் சரவணன் தெரிவித்தார்.
கோவையைச் சேர்ந்த கார்த்திகேசன் என்பவர் இயக்கி, நடிக்கும் அறுவடை என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக கார்த்திகேசன், கதாநாயகியாக சிம்ரன்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். அவர் இடம் பெறும் காட்சிகள் தொண்டாமுத்தூரில் உள்ள பழைய செங்கல் சூளையில் படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பு இடைவெளியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரவணன் கூறியதாவது, "அறுவடை என்ற புதுப் படத்தின் படப்படிப்பு நடைபெறுகிறது. இப்படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம். நல்ல கதை என்பதால், கதையை கேட்டதும் நடிக்க வந்துள்ளேன். படத்தின் பாடல்கள் நன்றாக வந்துள்ளன. இது பக்கா கமர்ஷியலான ஒரு ஆக்சன் படம். இது தனி மனித பிரச்னை எப்படி சமூக பிரச்னையாக மாறுகிறது என்பது பற்றிய கதை.
சாதி ரீதியான படங்கள் என்பது அந்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. அது நல்ல படமாக இருந்தால், வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான். அந்த காலத்தில் கேள்வி கேட்கும் மீடியா இல்லை. இப்போது எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள். அனைவரது கையிலும் கேமரா, மைக் உள்ளது. ஊடகம் பெருத்து விட்டது. அதனால் கேள்விகளும் அதிகரித்து விட்டன. சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுக்க வேண்டும்.
வரும் சங்க தேர்தலில் நல்ல தலைவரை தேர்வு செய்து, அவர் நல்ல முறையில் செயல்படுத்தினால் இந்த பிரச்னை சரியாகி விடும். சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவது என்பது காலங்காலமாக சினிமாவில் நடந்து கொண்டுள்ளது. எப்போதும் சின்ன படங்கள் ஓடிதான் , பெரிய படங்களாக மாறும். அதில் பணியாற்றியவர்கள் பெரிய மனிதர்களாக மாறுவார்கள். இது வழிவழியாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்.
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது தொடர்பாக, எல்லோரும் ஒத்துழைத்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு படம் ஓடுவது என்பது கடவுளின் அருள். கடவுள் அருள் பெற்றவன் வெற்றி பெறுவான். பருத்திவீரன் போல ஒரு கதாபாத்திரம், கடவுள் அருள் இருந்தால் சீக்கிரம் வரும். நடிகர் ரஜினிகாந்த் படம் என்பது தலைவன் படம்.
அந்த படத்தை யார் இயக்க போகிறார் என்பதை அறிய நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். பத்திரிகையாளர் நடிகை மோதல் விவகாரத்தில் தொடர்புடைய பத்திரிகையாளர் எனது நீண்ட கால நண்பர். அந்த நடிகையும் எனக்கு தெரிந்த பெண் தான். அது எதிர்பார்க்காத ஒன்று. அதில் பெரிய தவறு இல்லை. இருந்தாலும் பத்திரிகையாளர் மன்னிப்பு கேட்டுவிட்டார். முடிந்த போன விஷயத்தை திரும்ப கிளற வேண்டாம்" இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.