இந்துக்கள் இல்லாமல் உலகம் இருக்காது என்றும் இந்து சமூகம் அடக்குமுறையை ஒருபோதும் அனுமதிக்காது என்று மணிப்பூரில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
இன மோதல்கள் மணிப்பூரை பேரழிவிற்கு உட்படுத்திய பின்னர், முதல் முறையாக மணிப்பூருக்கு வருகை தந்த மோகன் பாகவத் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், உலகின் ஒவ்வொரு தேசமும் எல்லா வகையான சூழ்நிலைகளையும் கண்டிருக்கிறது. யுனான் (கிரீஸ்), மிஸ்ர் (எகிப்து), ரோம் போன்ற பேரரசுகளை இந்தியா கடந்துவிட்டது. அனைத்து நாகரீகங்களும் பூமியில் இருந்து அழிந்துவிட்டன. ஆனால் நமது நாகரீகத்தில் ஏதோ உள்ளது, அதனால்தான் நாம் இன்னமும் இங்கே இருக்கிறோம். இந்து சமூகம் ஒருபோதும் அழியாதது.
பாரதம் என்பது ஒரு அழியாத நாகரீகத்தின் பெயர். நமது சமூகத்தில் ஒரு வலையமைப்பை உருவாக்கியுள்ளோம். அதனால்தான், இந்து சமூகம் எப்போதும் அழியாமல் நிலைத்திருக்கும். இந்து தர்மம் அழிந்தால், உலக நாகரிகங்களும் அழியும். இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும். உலகை நிலை நிறுத்துவதற்கு இந்து சமூகம் மையமானது. இந்து சமூகம் தர்மத்தின் உலகளாவிய பாதுகாவலர் என்றார்.
மேலும், தேசத்தை கட்டியெழுப்பும்போது முதல் தேவை, நாட்டின் வலிமை. வலிமை என்றால் பொருளாதார வலிமை. நமது பொருளாதாரம் மிக உயர்ந்ததாக 'மேன்மை' இருக்க வேண்டும் என்று சொன்னால், சில நேரங்களில் அது தவறான பொருளை தரும். எனவே, நமது நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சுயசார்புடையதாக இருக்க வேண்டும். நாம் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது.
நாம் நமது பொருளாதாரத்தை தற்சார்பு பொருளாதாரமாக மாற்றுவது ஒன்றும் கடினமானது அல்ல. வேரூன்றிய பல பிரச்னைகளை நமது சமூகம் சமாளித்து வந்துள்ளது என்பதற்கு ஏராளாமன உதாரணங்கள் உள்ளன. உதாரணத்துக்கு நக்சல். இதை சமூகம் இனி பொறுத்துக்கொள்ளாது என முடிவெடுத்ததால் இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான நமது சுதந்திர போராட்டமும் அப்படித்தான்.
நாடு வலுவாக மாற, அதன் பொருளாதாரம் முழுமையாக தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதே நேரத்தில், ராணுவத் திறனும் அறிவுத் திறனும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கு முக்கியமானவை என்று பாகவத் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.