கோவையில் கார் விபத்தில் 4 பேர் பலி!
கோவை சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் நான்கு பேர் பலியாகினர்.
கோவை செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் நான்கு பேர் பலியாகினர். ஒருவர் சுயநினைவின்றி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை பேரூர் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியில் உள்ள எச்.பி பெட்ரோல் பங்க் அருகே அதிவேகமாக சென்ற டாட்டா அல்ட்ராஸ் கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையோர இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்தவர்களில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சுயநினைவின்றி கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஷ்(21) மற்றும் பிரகாஷ்(22) என்பதும், இருவரும் பேரூரில் உள்ள கனகஸ்ரீ வாட்டர் வாஷ் மற்றும் பார்க்கிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
Advertisement
மேலும், விபத்தில் பலியான இரண்டு பேர் மற்றும் படுகாயம் அடைந்த நபர் குறித்து கனகஸ்ரீ வாட்டர் வாஷின் உரிமையாளர் மருது மற்றும் மேலாளர் சரவணன் ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சபரி(21), அகத்தியன்(20) , மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் பிரபாகரன்(19) ஆகியோர் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.
புளிய மரத்தின் மோதி கார் விபத்து நடந்த சம்பவத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.