வெடிகுண்டு மிரட்டல்: நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் சென்னையில் அவசர தரையிறக்கம்
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நடுவானில் பறந்துகொண்டிருந்த இண்டிகோ விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நடுவானில் பறந்துகொண்டிருந்த இண்டிகோ விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மும்பை-தாய்லாந்து இடையே செல்லும் இண்டிகோ விமானம், 176 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை மாலை மும்பையில் இருந்து புறப்பட்டது. இதற்கிடையே மும்பை விமான நிலையத்திற்கு வந்த ஒரு மர்ம தொலைப்பேசி அழைப்பில், விமானத்தின் கழிவறைக்குள் வெடிகுண்டு மறைத்து வைத்திருப்பதாகவும், நடுவானில் அது வெடித்துச் சிதற இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
உடனே இதுகுறித்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு மும்பை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த விமானம் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டு இரவு 7.20 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Advertisement
பரிசளிக்கப்பட்ட மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி
பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து, விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடி படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், விமானத்துக்குள் இதுவரையில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது வழக்கமான புரளி என்று கூறப்படுகிறது. விமானத்தை முழுமையாக பரிசோதித்த பின்பு, சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு மீண்டும் புறப்பட்டு செல்லும் எனத் தெரிகிறது. இதனால் விமானப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.