வாழப்பாடி அருகே கொன்று புதைக்கப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுப்பு; பெற்றோர் கைது!
வாழப்பாடி அருகே கொன்று புதைக்கப்பட்ட தொழிலாளி உடலைத் தோண்டி எடுத்து பெற்றோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறித்து...
வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கொலை செய்து பாக்கு தோப்பில் புதைக்கப்பட்ட கட்டடத் தொழிலாளி உடலை வாழப்பாடி போலீஸார், சனிக்கிழமை காலை தோண்டி எடுத்தனர். இது தொடர்பாக அவரது பெற்றோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாழப்பாடி அடுத்த பேளூர் கரடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் கட்டடத் தொழிலாளி மணிகண்டன் (30). இவருக்கும் வினோதினி (28) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். மகன் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இதனால் மது போதைக்கு அடிமையான மணிகண்டன், குடித்து விட்டு குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த சூழலில், மனைவி வினோதினி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மணிகண்டன் அவ்வப்போது தனது மனைவி வினோதினியிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.
Advertisement
இந்த நிலையில், கடந்த மார்ச் 8-ஆம் தேதிக்கு பிறகு, தனது கணவர் மணிகண்டன் போனிலோ, நேரிலோ தொடர்பு கொள்ளாததால் சந்தேகமடைந்த வினோதினி, வாழப்பாடி காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என கடந்த ஏப்.1-இல் புகார் கொடுத்தார். இவரது புகாரின் போரில் வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடிபோதையில் தொடர்ந்து தகராறு செய்து வந்த கட்டடத் தொழிலாளி மணிகண்டனை அவரது பெற்றோர் லட்சுமி, சின்னப்பன் ஆகியோர் கல்லால் தாக்கி கொலை செய்து, அவர்களது பாக்குத்தோப்பில் புதைத்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, மணிகண்டன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தேடி கண்டுபிடித்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார், சனிக்கிழமை(ஏப் 4) காலை வாழப்பாடி வட்டாட்சியர் நாகலட்சுமி, போலீஸ் டிஎஸ்பி சபரிநாதன் ஆகியோர் முன்னிலையில், மணிகண்டனின் உடலைத் தோண்டி எடுத்தனர். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், சேலம் அரசு மருத்துவமனை உடற்கூறு மருத்துவ நிபுணர் கோகுல்ராஜ் குழுவினரை வரவழைத்து, அந்த இடத்திலேயே உடலை பரிசோதனை செய்து அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தகவல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.