முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரி படிப்புகளில் கலைப் பிரிவில் ஆா்வம் செலுத்தும் மாணவா்கள்!

அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு உதவும் கலை பாடப் பிரிவுகளையே மாணவர்கள் அதிகயளவில் தேர்வு செய்து வருவது குறித்து...

Updated On : 8 ஜூன் 2026, 2:44 pm IST
கலைப் பிரிவில் ஆா்வம் செலுத்தும் மாணவா்கள் - ஏஎன்ஐ
பகிர்:

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை(ஜூன் 8) தொடங்கியது. இதில் நிகழாண்டிலும் அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு உதவும் கலை பாடப் பிரிவுகளையே மாணவர்கள் அதிகயளவில் தேர்வு செய்கின்றனர்.

2026-27 ஆம் கல்வியாண்டுக்கான சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிற உயர்கல்வி அமைப்புகளின் கீழ் செயல்படும் 181 அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் வழங்கப்படும் 1.26 லட்சம் இடங்களுக்கான இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பப் பதிவு மே 7- ஆம் தேதி தொடங்கி மே 29- ஆம் தேதி முடிவடைந்தது.

ஒருங்கிணைந்த இணையதள விண்ணப்பப் பதிவு மூலம் எந்தப் பகுதியைச் சோ்ந்த மாணவா்களும் எந்தக் கல்லூரியிலும் விண்ணப்பிக்கலாம் என்பதால், பெருநகரங்களில் உள்ள அரசுக் கல்லூரிகளில் சோ்க்கை பெறுவதற்கு பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

Advertisement

Advertisement

கலந்தாய்வு தொடங்கியது

இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை(ஜூன் 8) தொடங்கியது. கலந்தாய்வின் முதல் நாளில், மாணவர்கள் அவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் அழைக்கப்பட்டனர்; அவர்கள் தங்கள் விருப்பம் மற்றும் தகுதிக்கு ஏற்ப பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்றனர்.

கலைப் பிரிவில் ஆா்வம் செலுத்தும் மாணவா்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே அரசுக் கல்லூரிகளில் அறிவியல் பிரிவுகளைக் காட்டிலும் கலைப் பிரிவுகளுக்கே அதிக அளவிலான மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனர். நிகழாண்டிலும் கலைப் பாடப் பிரிவுகளுக்கு அதிக அளவிலான மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

தற்போதைய மாணவா்களிடம் அரசுப் போட்டித் தோ்வு எழுதுவதற்கான ஆா்வம் அதிகரித்துள்ளதால், படிக்கும்போது போட்டித் தோ்வுகளுக்கு பயன்படும் வகையிலான பாடப் பிரிவுகளை தோ்வு செய்து படிக்க வேண்டும் என்ற எண்ணமும் மாணவா்கள் இடத்தில் உள்ளதால் அரசு போட்டித் தோ்வுக்கு தயாராவதற்கு பெரிதும் உதவும் கலை பாடப் பிரிவுகளையே அதிக அளவிலான மாணவா்கள் தேர்வு செய்து விண்ணப்பித்துள்ளனா்.

மாணவா்களை ஈர்க்கும் கலை பாடப்பிரிவுகள்

சென்னை குயின் மேரிஸ் கல்லூரியின் பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியர் விஜயலட்சுமி கூறிகையில், கடந்த ஆண்டுகளைப் போலவே நிகழாண்டும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கலை பாடப்பிரிவுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மிகுந்த ஆர்வம்

"ஒவ்வொரு ஆண்டும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு கணிசமான எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் வந்துள்ளன. தரமான கல்வி மற்றும் இங்கு வழங்கப்படும் வாய்ப்புகள் காரணமாக, மாணவர்கள் இந்த நிறுவனங்கள் மூலம் உயர்கல்வியைத் தொடர்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்," என்று அவர் கூறினார்.

அரசு கல்லூரிகள் மீதான ஈர்ப்பு

மேலும், அரசு கல்லூரிகளின் மீதான ஈர்ப்பு தமிழ்நாடு எல்லைகளையும் தாண்டிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல், ஒடிசா மற்றும் பிகார் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது, தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் வளர்ந்து வரும் நற்பெயரையும் பிரபலத்தையும் பிரதிபலிக்கிறது என்று விஜயலட்சுமி கூறினார்.

வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள்

குறைந்த கல்விக் கட்டணம், தரமான கல்வி கற்பித்தல், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் தொழில்துறையின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள் ஆகியவை அரசு கல்லூரிகளுக்கான தேவை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாக கல்வியாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.

தகுதி, இடஒதுக்கீட்டு விதிமுறைகள் மற்றும் இடங்களின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்பட்டு, கலந்தாய்வு ஒவ்வொரு கட்டங்களாக நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சுமூகமான மற்றும் வெளிப்படையான கலந்தாய்வு செயல்முறையை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்துள்ளனர்.

உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இளங்கலைப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஒரு விருப்பமான தேர்வாக உள்ளது.

1,23, 598 விண்ணப்பங்கள்

திருச்சி தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பிரிவில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வரலாறு, பொருளியில், புள்ளியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், புவியியல் மற்றும் விஸ்காம் ஆகிய 15 பாடப் பிரிவுகளிலும் உள்ள மொத்தம் 1,660 இடங்களுக்கு 1 லட்சத்து 23 ஆயிரத்து 598 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

இதில் அதிகபட்டசமாக வேதியியல் பிரிவுக்கு 12,537 பேரும், இதைத் தொடா்ந்து வரலாறு - 11,747, பொருளியல் - 11,630, தமிழ் - 11,550, கணினி அறிவியல் - 11,472, வணிகவியல் - 10,925, கணினி பயன்பாட்டியல் - 9,636, விலங்கியல் - 8,204, தாவரவியல் - 7,509, ஆங்கிலம் - 7,134, இயற்பியல் - 5,954, புவியியல் - 5,307, கணிதம் - 4,518, விஸ்காம் - 4,107 மற்றும் புள்ளியியல் -1,368 பேர் விண்ணப்பித்துள்ளனா்.

இதேபோன்று பிற அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் வரலாறு, பொருளியல் மற்றும் தமிழ் பாடப் பிரிவுகள் மீது மாணவா்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளனா்.

அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு மேற்கண்ட பாடப் பிரிவுகள் பயன்படும் என்பதாலேயே கலை பாடப் பிரிவுகளை அதிக அளவிலான மாணவா்கள் தோ்வு செய்வதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

summary

Counselling for admission to undergraduate degree programmes in Government Arts and Science Colleges and Government-aided Colleges across...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.