சௌமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டி கௌரவம்!
லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக, உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டா் சௌமியா சுவாமிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து...
உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டா் சௌமியா சுவாமிநாதன், லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ராயல் சொசைட்டி, உலகின் பழமையான அறிவியல் அகாதமிகளில் ஒன்று. இதில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவது கௌரவமாகும்.
இந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்தவரும், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஎம்ஆர்) முன்னாள் தலைமை இயக்குநருமான டாக்டர் சௌமியா சுவாமிநாதன், அறிவியல் துறையில் உலகிலேயே மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படும் 'ராயல் சொசைட்டி'யின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
டாக்டர் சௌமியா சுவாமிநாதனும், அவரது தந்தையும் 'பாரத ரத்னா' விருது பெற்றவருமான பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனும், இந்தியாவிலிருந்து 'ராயல் சொசைட்டி'யின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தந்தை-மகள் என்ற பெருமையைப் பெற்றுள்ளதன் மூலம், இந்தச் சாதனை இந்திய அறிவியல் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், 'ராயல் சொசைட்டி'யின் 365 ஆண்டுகால வரலாற்றில் பேராசிரியர் ககன்தீப் காங்கிற்குப் பிறகு, இந்த கௌரவத்தை பெறும் இரண்டாவது இந்தியப் பெண் விஞ்ஞானி என்ற பெருமையையும் பெற்றுள்ளார் டாக்டர் சுவாமிநாதன்.
இந்தத் தகவலை, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கழகத்தின் (சிஎஸ்ஐஆர்) முன்னாள் தலைமை இயக்குநரும், இந்திய தேசிய அறிவியல் அகாதமி, தேசிய புத்தாக்க அறக்கட்டளை மற்றும் உலகளாவிய ஆராய்ச்சிக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவருமான டாக்டர் ரகுநாத் மாஷேல்கர் பகிர்ந்துள்ளார்.
உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் ஒரு பொது சுகாதார நிபுணரான டாக்டர் சுவாமிநாதன், காசநோய், எச்.ஐ.வி மற்றும் கரோனா -19 பெருந்தொற்று உள்ளிட்ட முக்கிய சுகாதார நெருக்கடிகளைக் கையாள்வதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
கடந்த பல பத்தாண்டுகளாக, அறிவியல், சுகாதாரக் கொள்கை மற்றும் உலகளாவிய நெருக்கடி மேலாண்மை ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்பில் அவர் ஆற்றிய பணிகளின் மூலம், பொது சுகாதாரத் துறையில் மிகவும் நம்பகமான குரல்களில் ஒருவராக அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
ராயல் சொசைட்டிக்கு சௌமியா சுவாமிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இந்திய அறிவியலுக்கும், உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் சுகாதாரத் தலைமைத்துவத்தில் நாட்டின் வளர்ந்து வரும் பங்களிப்பிற்கும் ஒரு பெருமைக்குரிய தருணமாகப் பார்க்கப்படுகிறது.