வீணாவின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது உண்மைதான்; குறுகிய மனப்பான்மையுடன் காங்கிரஸ்! பினராயி விஜயன்
அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறித்து பினராயி விஜயன் கருத்து
கேரள முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், அவரது மகள் வீணா விஜயன் தொடர்புடைய ரூ. 18.36 கோடி இருப்புள்ள 242 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 3 வங்கிக் கணக்குகள் வீணாவின் பெயரில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை குறித்து கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில்,
Advertisement
Advertisement
"சோதனையின்போது அதிகாரிகள் யாரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நான் அங்கேதான் இருந்தேன்.
கேரள முதல்வர் ஏன் இதற்குப் பதிலளிக்கவில்லை என்பது அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. பாஜக சார்பில்லாத கட்சிகளுக்கு எதிராக, மத்திய பாஜக அரசு எப்போதும் கடுமையான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது.
தங்கள் கட்சிக்கு எதிராக நடவடிக்கை அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும்போது மட்டுமே, காங்கிரஸ் எதிர்வினையாற்றுகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு, நாட்டின் யதார்த்த சூழலுக்குப் பொருத்தமானதாக இல்லை. காங்கிரஸ் தலைமை ஒரு குறுகிய மனப்பான்மையுடனான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்துள்ளனர்.
வீணாவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், அதிகாரிகள் கூறுவதைப்போல அவருக்கு அத்தனை வங்கிக் கணக்குகள் இல்லை" என்றார்.