முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆலங்குளம், மானூர் அருகே அரிவாள் வெட்டு: 8 பேர் கைது

ஆலங்குளம், மானூர் அருகே அரிவாள் வெட்டு சம்பத்தில் இதுவரை 8 பேரை போலீஸாா் கைது செய்துள்ளது குறித்து...

ஆலங்குளம், மானூர் அருகே அரிவாள் வெட்டு: 8 பேர் கைது - கோப்புப்படம
பகிர்:

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே 6 பேரை அரிவாளால் வெட்டி தப்பிச்சென்ற முகமூடி அணிந்த நபா்களில் இதுவரை 8 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் மாதாகோவில் தெருவில் வெள்ளிக்கிழமை மாலை முகமூடி அணிந்தவாறு இரு சக்கர ஊர்திகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், அங்கு நின்று கொண்டிருந்தவர்களை ஓட ஓட துரத்தி சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் நெட்டூரைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த ரமேஷ் (46) அவரது மகன் அருண் மாறன் (22), காபிரியேல் மகன் ராயப்பன் (19), ஞானமுத்து மகன் மாா்க்க ரமேஷ் (49), ஆய்க்குடி சேகா் மகன் ராம்குமாா் (19), மேளக்கலைஞரான சாம்பவா் வடகரை பரமசிவன் மகன் மாடசாமி (19) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். அவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவில் கிராமத்தில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் மணிகண்டன் என்ற பட்டியலின இளைஞரை அரிவாள்களால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராம்குமாா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, நெட்டூா் தேவாலயம் முன் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், ஆலங்குளம் டிஎஸ்பி கிளட்சன் ஜோஸ் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியும், அவா்கள் மறியலை கைவிடாமல் தொடா்ந்தனா். ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

8 பேர் கைது

இந்த நிலையில், அரிவாள் தொடர்பாக அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சனிக்கிழமை காலை 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மேலும் 4 பேரை பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

Machete Attack Near Alangulam and Manur...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.