முகப்பு
ரசிக்க... ருசிக்க...

கடுமையான சளி, இருமல், தலைவலியா சூடா ஒரு கப் திரிகடுக காஃபீ குடிங்க சரியாகிடும்!

கூட நாலு ஏலம் கலந்தால் மணக்க, மணக்க இந்த திரிகடுக காஃபீ நாக்கைச் சுண்டி இழுக்கும்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:04 AM
பகிர்:

தேவையான பொருட்கள்:

சுக்கு: 50 கிராம்
மிளகு: 50 கிராம்
திப்பிலி: 50 கிராம்
தேன்: சிறிதளவு
நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம்: தேவையான அளவு.

செய்முறை: 

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் திரிகடுகம் என்பார்கள். மனிதனின் உடல் ஆரோக்யத்தில் இதன் பங்கு அதிகம். சளி, இருமல், கபம், ஆஸ்துமா போன்ற சுவாச மண்டலத்துடன் தொடர்புடைய நோய்களுக்கு இந்த திரிகடுகம் கண்கண்ட மருந்து. மேலே சொல்லப்பட்ட மூன்று பொருட்களையும் சொல்லப்பட்ட அளவுகளில் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்து நைஸான பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்து சுத்தமான தேன் கலந்து சப்பிட்டு வர விரைவில் சளி, இருமல், கபக்கட்டு அகலும். 

இப்படி அருந்துவது போர் என்று நினைப்பவர்கள். சுக்குமல்லிக் காஃபீ போல இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதில் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் கலந்து அருந்தலாம். கூட நாலு ஏலம் கலந்தால் மணக்க, மணக்க இந்த திரிகடுக காஃபீ நாக்கைச் சுண்டி இழுக்கும்.

சுக்குமல்லியில் கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்துவோம், திரிகடுகத்தில் திப்பிலி சேர்க்கிறோம் அவ்வளவு தான் வித்யாசம். இதில் திப்பிலி இருக்கிறதே அது மிளகைக் காட்டிலும் காரம் அதிகமானது. எனவே கார்ப்புச் சுவை வேண்டாம் என நினைப்பவர்கள் திப்பிலியின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். காய்ந்த இஞ்சி தான் சுக்கு எனவே மூன்றையும் சில மணி நேரங்கள் வெயிலில் காய வைத்து எடுத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொண்டால் வீட்டில் யாருக்கெல்லாம் சளித்தொல்லை, இருமல், கபம் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் திரிகடுக காஃபீ போட்டுக் கொடுத்து அருந்த வைத்து சளித்தொல்லையிலிருந்து தப்பலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.