முகப்பு
செய்திகள்

அதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்!

கடந்த 26 ஆண்டுகளாக ஒதிஷாவின் சுந்தர்கார் வனப்பகுதிகளிலும் கூட கறுஞ்சிறுத்தை நடமாட்டம் முற்றிலுமாக அருகியிருந்தது. தற்போது மீண்டும் அவற்றின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் ஆச்சர்யத்துடன் பதிவு

Updated On : 23 மே 2018, 11:39 am IST
பகிர்:

விஜயின் ‘புலி’ திரைப்படத்தில் கறுஞ்சிறுத்தையைப் பார்த்திருப்பீர்கள். அது கம்ப்யூட்டர் சித்தரிப்பு. நிஜமாகவே கருஞ்சிறுத்தையை நேரில் பாத்தவர்கள் குறைவு தான். நம்மூர் வனவிலங்கு சரணாலயங்களில் வெள்ளைப் புலி, காண்டாமிருகம், நீர்யானை,  சிவப்புப் புள்ளிகளுடன் கூடிய சிறுத்தைப்புலி, வேங்கைப்புலி, பிடறிப் பெருமைகள் தவிர உடல் வற்றி ஒடுங்கிப்போன ஆண்சிங்கம், பெண் சிங்கங்களை நாம் பார்த்திருக்கக் கூடும். ஆனால், இந்த கறுஞ்சிறுத்தை இங்கே அதிசயம். இந்தியாவில் முதல்முறையாக ஒதிஷா காடுகளில் கறுஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அம்மாநில வனத்துறை காணொளிப் பதிவுகள் உணர்த்தியிருக்கின்றன. 

கடந்த 26 ஆண்டுகளாக ஒதிஷாவின் சுந்தர்கார் வனப்பகுதிகளிலும் கூட கறுஞ்சிறுத்தை நடமாட்டம் முற்றிலுமாக அருகியிருந்தது. தற்போது மீண்டும் அவற்றின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் ஆச்சர்யத்துடன் பதிவு செய்திருக்கின்றனர்.

இந்தியாவின் தேசிய விலங்கு அங்கீகாரம் பெற்றிருக்கும் வங்கப்புலிகள், கறுஞ்சிறுத்தைப் புலிகள், வெண் புலிகள், சிறுத்தைகள், மான்கள், ஏனைய பிற வனவிலங்குகளை வேட்டையாடுதலோ அல்லது அவற்றின் உயிருக்கு ஊறு விளைவித்தலோ தண்டனைக்குரிய குற்றமாக இந்தியாவில் கருதப்படுகிறது. காரணம் அவற்றின் அருகி வரும் எண்ணிக்கை. உயிர்ச்சமநிலையை நிலைநிறுத்த காடுகளில் வெவ்வேறு விதமான வனவிலங்குகளின் எண்ணிக்கையும் குறிப்பிட்டத்தக்க அளவில் சராசரியாக நீடிக்கப் படவேண்டும். ஆனால், விலங்குகளின் தோல், பற்கள், நகங்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களுக்காக விலங்குகளை வேட்டையாடுதல், பருவநிலை மாறுபாடுகள், காடுகளை அழித்து விளைநிலங்களாகவும், மக்களுக்கான வாழிடங்களாக அவற்றை மாற்றும் முயற்சி, போதிய மழையின்மை, வன வறட்சி, உள்ளிட்ட காரணங்களால் அரிதான பல விலங்குகளின் எண்ணிக்கை கவலைக்குரிய வகையில் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தன. அவற்றின் இந்த கருஞ்சிறுத்தைபுலிகளின் எண்ணிக்கை முற்றிலுமாக ஒதிஷா காடுகளில் இருந்து அழிந்து விட்டது என்றே கடந்த 26 ஆண்டுகளாகக் கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது அவற்றின் இருப்பு வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேமிராப் பதிவுகளின் வாயிலாக தெரிய வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியாக அம்மாநில வனத்துறையினரால் கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

ஒதிஷாவில் 6000 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் கர்ஜன்பஹத் ரிசர்வ் வனப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகப் பொருத்தப்பட்டுள்ள கேமிராக்களில் பல்வேறு விதமான வனவிலங்குகளின் இருப்பு தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒதிஷா வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி ஒதிஷா மாநிலத்தின் பல்வேறு காடுகளில் வங்கப்புலிகளும், கரும்புலிகள் மற்றும் கறுஞ்சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் இருப்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒதிஷா காடுகளில் முதல்முறையாக கரும்புலி இருப்பது 1993 ஆம் ஆண்டில் தெரியவந்தது. ஆனாலும் அதன் இருப்பு அதிகாரப்பூர்வமாக 2007 ஆம் ஆண்டில் தான் பதிவு செய்யப்பட்டது. ஒதிஷாவின் நந்தன்கனன் விலங்குகள் சரணாலயத்தின் சிமிலிபல் வனப்பகுதியில் 2016 ஆம் ஆண்டு மே 18 தேதி வரை மூன்று கரும்புலிகளின் இருப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே கரும்புலிகள் இருக்கும் ஒரே காடு என்று இதை மட்டுமே சொல்ல முடியும்.

இந்தியக் காடுகளில் உலகின் அரிய வனவிலங்குகளாகக் கருதப்படும் கரும்புலிகள் மற்றும் கருஞ்சிறுத்தைகள் வாழ்வது கேமிராப்பதிவுகள் மூலமாகத் தெரிய வந்திருப்பது வரவேற்கப்படத்தக்க விஷயம் என தேசிய புலி பாதுகாப்பு ஆணையம் (NTCA)  தலைவர் திரிபாதி தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.