முகப்பு
செய்திகள்

குணா குகையை பார்க்க முடியுமா?

மஞ்நுமல் பாய்ஸ் படத்தைத் தொடர்ந்து குணா குகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர்.

Updated On : 12 மார்ச், 2024 at 6:44 AM
பகிர்:

திண்டுக்கல்: மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது.. என்ற குணா படத்தின் வசனம் தற்போது ஒலித்துக்கொண்டிருப்பதற்கு மஞ்நுமல் பாய்ஸ் படமும் ஒரு காரணம்.

ஆங்கிலத்தில் பேய் குகை என்று அழைக்கப்படும் இது தமிழகத்தின் கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ளது. 1991ஆம் ஆண்டு இந்த குகையில் எடுக்கப்பட்ட குணா படத்தின் மூலம் இதற்கு குணா குகை என்று பெயர் வந்தது. அந்த படம் வந்தபிறகு இங்கு ஏராளமான கூட்டம் வந்தது.

இந்த குகையில் இருக்கும் மர்மமான பள்ளங்களில் விழுந்த பலரும் உயிரிழந்துள்ளனர். பலரது உடலைக் கூட மீட்கமுடியாமல் போயிருப்பதாகக் கூறுகிறது புள்ளிவிவரங்கள். இதுவரை 16 பேர் மாயமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

பலரும் பலியானதைத் தொடர்ந்து, குணா குகையின் வாயில் மூடப்பட்டு, வெளியிலிருந்து மட்டுமே சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.

மஞ்ஞுமெல் பாய்ஸ் படத்தின் இறுதிக்கட்டக் காட்சியில், ஒலிக்கும் இந்தப் பாடலின்போது, பல இதயங்கள் உணர்ச்சிப்பெருக்கோடும் சில கண்கள் கண்ணீரோடும் திரையரங்கிலிருந்து புறப்படுகின்றன.

குணா படம் வந்தபோது எப்படி கொடைக்கானல் செல்வோரின் பார்வை குணா குகையை நோக்கித் திரும்பியதோ அப்படித்தான் இப்போதும் மஞ்ஞுமெல் பாய்ஸ் படம் பார்த்துவிட்டு பலரும் குணா குகைக்கு படையெடுக்கிறார்கள். அங்கிருந்து ஒரு செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸில் வைத்தால்தான் தாங்கள் பிறந்தப் பலனை அனுபவித்ததுபோன்ற ஒரு உணர்வு.

இப்போது தேர்வுகள் நடப்பதால் சீசன் இல்லாவிட்டலும் கூட, மலையாளம் படத்தின் வெற்றி, மர்மமான அந்தக் குகை மீது மக்களின் மாறாக் காதலுக்குக் காரணமாகிவிட்டது. ஒரு வாரத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் வரை இந்த குகைக்கு வந்துசெல்வதாக சொல்கிறது புள்ளிவிவரம்.

வனத்துறை அதிகாரிகள் இது குறித்து பேசுகையில், மஞ்ஞுமெல் பாய்ஸ் என்ற மலையாள படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்தக் குகைக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், இப்போது சீசன் இல்லாத காலம். ஆனால், சீசன் நேரத்தில் இங்கு கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கும் குணா குகைக்கும் வந்துள்ளனர். மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலம், மாவட்ட நிர்வாகத்துக்கும், வனத்துறை மற்றும் உள்ளூர் வணிகர்களுக்கும் வருவாய் அதிகரித்துள்ளதாம்.

மற்றொருபக்கம் குணா குகைக்கு செல்ல வரும் இளைஞர்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுப்பது வனத்துறைக்கு சவாலாக மாறியிருக்கிறது. திங்களன்று ராணிப்பேட்டையைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments