பல் சொத்தைக்கு 'சர்க்கரை' காரணமா? ஈறுகளில் ரத்தம் கசிவது ஏன்?
பல் சொத்தை பற்றிய தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்...
பல் சொத்தை ஏன் ஏற்படுகிறது? ஈறுகளில் ஏன் ரத்தம் கசிகிறது? பல் துலக்குவதற்கு பதிலாக சூயிங்கம் பயன்படுத்தலாமா?
பல் சொத்தை குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கிறார் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பிரேம் குமார்.
தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்...
Advertisement
Advertisement
கடினமாக பல் துலக்கினால் பற்கள் நன்றாக சுத்தமாகும்
உண்மையல்ல. பல் துலக்குதல் என்பது வாய்வழி ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது வாய்வழி சுகாதாரத்திற்கு முக்கியமானதும் ஆகும். அதிக விசையுடன் கடினமாக பல் துலக்கும்போது, பற்கள் தேய்மானம், ஈறு பின்வாங்குதல், பல் கூச்சம் அதிகரித்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். சரியான முறையில் சுத்தம் செய்ய, மென்மையான முள்கள் கொண்ட பல் துலக்கும் பிரஷைப் பயன்படுத்த வேண்டும், அதிக அழுத்தத்துடன் தேய்க்கக் கூடாது, கடினமான முள்கள் மற்றும் கடினமாக பல் துலக்குதல் நிரந்தர பற்கள் சேதத்தை ஏற்படுத்தக் கூடும்.
பல் துலக்குவதற்கு மாற்றாக சூயிங்கம் பயன்படுத்தலாம்
சர்க்கரை இல்லாத சூயிங்கம் பயன்படுத்தலாம். அதுவும் பல் துலக்குதலுக்கு மாற்றாக இல்லாமல் பல் துலக்குவதும் அவசியம். மெல்லுதல், உமிழ்நீர் சுரப்பைத் தூண்டுகிறது. இந்த உமிழ்நீர், பற்களின் இடையே உள்ள உணவுத் துகள்களை அகற்றுகிறது, பற்களில் உள்ள அமிலங்களை நடுநிலையாக்குகிறது, எனாமலை வலுப்படுத்துகிறது. இதன் மூலமாக பற்சொத்தை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. சூயிங்கம் பயன்படுத்தினாலும் பல் துலக்குவது அவசியம்.
சர்க்கரை, பல் சொத்தையை ஏற்படுத்துகிறது
உண்மைதான். பல் சொத்தை பொதுவாக பல் சிதைவு அல்லது பற்குழிகள் என்று அழைக்கப்படுகிறது. இது உலகளவில் மிகவும் பரவலான தொற்றா நோயாகும். சுமார் 250 கோடி மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுகள் மற்றும் செயற்கை பானங்களில் காணப்படும் சர்க்கரையை உட்கொள்வது இதற்கு முக்கிய காரணமாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மொத்த ஆற்றல் உட்கொள்ளலில் சர்க்கரை நுகர்வை 10%க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். 5% க்கும் குறைவாகவும் இருப்பது, வாழ்நாள் முழுவதும் பல் சொத்தை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள் சர்க்கரை கலந்த அனைத்து பானங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது.
ஈறுகளில் ரத்தம் கசிவது இயல்பானது
ஈறுகளில் ரத்தம் கசிவது ஈறு நோய் இருப்பதையோ அல்லது அதற்கான அபாயத்தையோ குறிக்கலாம். அவை பெரும்பாலும் பற்களில் உணவுத் துகள்கள் மற்றும் சர்க்கரை படிவதால் ஏற்படும் வீக்கத்தின் அறிகுறியாகும். இது இயல்பானது என்று விட்டுவிடக்கூடாது. தினசரி வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துவதுடன், தொடர்ந்து ரத்தம் கசிந்தால், அது ஈறு நோயாக மாறுவதற்கும் இறுதியில் பல் இழப்பிற்கும் வழிவகுக்கும். அபாயத்தைக் குறைக்க, ஒரு பல் மருத்துவ நிபுணரை உடனடியாக அணுகுவது நல்லது.