முகப்பு
ஸ்பெஷல்

விபரீதத்தை விலைக்கு வாங்க நினைக்கும் பெற்றோர்களுக்கு வீடியோ மூலமாக ஒரு எச்சரிக்கை!

சொல்லும் போது அவரது தொனியில் பையனின் செயலைப் பற்றிய அச்ச உணர்வையும் மீறி பெருமித உணர்வு மிகுந்திருந்தது. அட! எம்பையனாக்கும், 5 வயசுக்குள்ள பாருங்க, விட்டா அவன் காரே ஓட்டுவானாக்கும்!

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 2:31 pm IST
பகிர்:

பக்கத்து வீட்டுப் பெண் அடிக்கடி கூறுவார். தன் 5 வயது மகனை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு காரோட்டுவது தனக்கு மிகச்சிரமமான காரியம் என்று. பையன் படு சுட்டி. அம்மாவைக் கார் ஓட்டவே விடாது, தானே காரை இயக்குவேன் என்று படு பயங்கரமாக அடம்பிடிப்பானாம். இதைச் சொல்லி விட்டு ஆளில்லாத மைதானம் அல்லது குடியிருப்பு வளாகச் சாலைகள் என்றால், அவனது பிடிவாதத்தை சமாளிக்க முடியாமல் தான் எப்போதோ ஒரு முறை அவனிடம் காரை இயக்கச் சொல்லி அனுமதித்ததால் அவன் அதே நினைவில் எப்போது காரில் தன்னுடன் வந்தாலும் இப்படித்தான் அடம்பிடிக்கிறான். அவனது அப்பா என்றால் ஒரே மிரட்டலில் அடங்கி விடுவான். நான் என்றால் விடாமல் நச்சரித்தும், அழுது அடம்பிடித்தும் காரியத்தைச் சாதிக்கப் பார்ப்பான் என்றும் கூறிக் கொண்டிருந்தார். சொல்லும் போது அவரது தொனியில் பையனின் செயலைப் பற்றிய அச்ச உணர்வையும் மீறி பெருமித உணர்வு மிகுந்திருந்தது. அட! எம்பையனாக்கும், 5 வயசுக்குள்ள பாருங்க, விட்டா அவன் காரே ஓட்டுவானாக்கும்! என்பது மாதிரியான பெருமிதம் பொங்கி வழிந்தது.

இப்படியொரு சம்பவம் தான் இந்த வீடியோவில் நிகழ்வதும்...

நீங்களே பாருங்கள்... பார்த்து விட்டு யோசியுங்கள்.

Advertisement

Advertisement

நீங்களும் இப்படியான பெற்றோர்களில் ஒருவர் தானா? என; பெற்றோர் குழந்தைகளை என்கரேஜ் செய்ய வேண்டியது அவசியம் தான். ஆனால், அது எதில்? என்பதில் மிகுந்த கவனம் வேண்டும். இல்லாவிட்டால் நடக்கவிருக்கும் விபரீதங்களுக்கு அவர்கள் தான் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டியதாயிருக்கும் என்பதை மறக்கவோ, மறுக்கவோ கூடாது.

மேற்கண்ட வீடியோவில் பார்த்தீர்கள் அல்லவா? அதே போன்ற காரியங்களைப் பல பெற்றோர்கள் செய்கிறார்கள். பெருமைக்காக அவர்கள் செய்யும் இப்படியான காரியங்கள் குழந்தைகளுக்கு மட்டும் ஆபத்தானவை அல்ல. பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவையே! பெற்றோர்கள் அதை எப்போதும் உணர்ந்திருக்க வேண்டும். மேலே வீடியோவில், இன்னமும் எலிமெண்டரி ஸ்கூல் கூட தாண்டியிராத வயதில் இருக்கும் தனது மூத்த குழந்தையை இருசக்கர வாகனத்தை இயக்க விட்டு விட்டு அந்த வண்டியில் அம்மா, அப்பா மற்றுமொரு குழந்தை என நால்வர் பயணிக்கிறார்கள். இது எத்தனை அபத்தமான செயல். இந்தச் செயலை சக பயணி ஒருவர் அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியதில் தற்போது அந்த தந்தையின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல். இது நடந்தது தமிழ்நாட்டில் அல்ல கேரளாவில்.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின், உடலுறுப்புகளை இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெற்றோர், பெருமைக்காக தங்களது குழந்தைகள் இப்படியான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமே தவிர என்கரேஜ் செய்து விட்டு பிறகு அவஸ்தைப் படக்கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.