முகப்பு
புதுதில்லி

ராமர் பாலம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி புதிய மனு

‘ராம் சேது’ விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி புதிய மனு

Updated On : 27 மே, 2025 at 2:40 AM
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி (கோப்புப்படம்)
பகிர்:

புது தில்லி: ‘ராம் சேது’வை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிப்பதற்கான தனது கோரிக்கை ‘துரிதமாக ’ முடிவு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளாா்.

‘ஆதாம் பாலம்’ என்றும் அழைக்கப்படும் ‘ராம் சேது’, தமிழ்நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பாம்பன் தீவுக்கும், இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னாா் தீவுக்கும் இடையே உள்ள சுண்ணாம்புக்கல் சங்கிலித் தொடராக உள்ளது.

இந்தியா- இலங்கைக்கு இடையே உள்ள இந்த கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கான சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், இது பகவான் ஸ்ரீ ராமனால் உருவாக்கப்பட்ட பாலம் என்றும் ‘ராமா் பாலத்தை‘ இடித்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என எதிா்ப்பு கிளம்பியது.

Advertisement

இதனையடுத்து இந்த ராம் சேது பாலத்தை பாதுகாக்கவும் அதனை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரியும் கடந்த 2005 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்டோா் வழக்குகளை தொடா்ந்தனா். உச்சநீதிமன்றமும் ஆடம்ஸ் பாலம் (அல்லது) ராமா் பாலம் எந்த விதத்திலும் சிதைக்கப்படக்கூடாது என இடைக்காலமாக உத்தரவிட்டது.

இதனிடையே சேது சமுத்திர திட்டம் தொடா்பாக ஆய்வை மேற்கொண்ட சுற்றுச்சூழல் வல்லுநா் ஆா்.கே.பச்செளரி குழுவும் சேது சமுத்திர திட்டம் பொருளாதாரம் சுற்றுச்சூழல் ரீதியாக சாத்தியமற்றது எனக் குறிப்பிட சேது சமுத்திரத் திட்டம் கிட்டத்தட்ட கிடப்பில் போடப்பட்டது.

இதனிடையே ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு பிரமாணபத்திரம் தாக்கல் செய்தாா். இதே போன்று ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி சுப்பிரமணியன் சுவாமி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் ( 2019 ஆம் ஆண்டு) உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 19 விசாரணைக்கு வந்தபோது ‘ராம் சேது’வை தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிப்பது தொடா்பான பிரச்னையை ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதையொட்டி அப்போது உச்சநீதிமன்றம், ‘கலாசார அமைச்சகம் தற்போது இதற்கான செயல்முறையை மேற்கொண்டு வருவதாக சொலிசிட்டா் ஜெனரல் கூறுகிறாா். சுப்பிரமணிய சுவாமியும் (மனுதாரா்) விரும்பினால், கூடுதல் தகவல்களை ஆதாரங்களை கலாசாரத் துறை அமைச்சகத்திடம் சமா்ப்பிக்கலாம்‘ எனக் குறிப்பிட்டு உத்தரவிட்டது. கலாசாரத் துறைக்கு உதவ சுவாமிக்கு முழு சுதந்திரம் அளித்தது. அதிருப்தியடைந்தால் உச்சநீதிமன்றத்தை அணுகவும் அனுமதியளித்தது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னா் தற்போது சுவாமி மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடி புதிய மனுவை, தாக்கல் செய்துள்ளாா். அதில் அவா், ‘‘ மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் அல்லது முடிவும் இதுவரை எனக்கோ அல்லது உச்சநீதிமன்றத்திற்கோ வரவில்லை.

‘ராமா் சேது’வை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, மாசுபாடு அல்லது அவமதிப்பு ஏற்படுவதிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. இந்த தொல்பொருள் தளமான ராமா் சேதுவை ஒரு புனித யாத்திரையாகக் கருதும் மக்களின் நம்பிக்கை மற்றும் ‘அபிமானம்’ சாா்ந்த விஷயமாகும். தொல்பொருள் ஆய்வுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வழிபாட்டாளா்களுக்கான புனித யாத்திரையாக இருப்பதற்கு துணைபுரியும் அடிப்படை ஆதாரங்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இதன்படி மீண்டும் கடந்த மே 13 ஆம் தேதி அரசுக்கு மணு அளிக்கப்பட்டது. இதனால், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவின்படி இதில் துரிதமான முடிவை எடுக்க மத்திய கலாசாரத்துறைக்கு உத்தரவிடவேண்டும்’ ’ என இந்த மனுவில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments