கேரளத்தில் தமிழ் இசை!
'நாகர்கோவில் அருகே வடிவீஸ்வரத்தில் 1839-ஆம் ஆண்டில் சுப்பிரமணி ஐயர்-அழகம்மை தம்பதிக்குப் பிறந்தவர் சுப்பிரமணியன்.
'நாகர்கோவில் அருகே வடிவீஸ்வரத்தில் 1839-ஆம் ஆண்டில் சுப்பிரமணி ஐயர்-அழகம்மை தம்பதிக்குப் பிறந்தவர் சுப்பிரமணியன். குழந்தைப்பேறு இல்லாமல் பல ஆண்டுகள் கழித்து, முருகனின் அருளால் பிறந்ததால் இவருக்கும் 'சுப்பிரமணியன்' என்ற பெயரே சூட்டப்பட்டது.
தந்தை சுப்பிரமணி ஐயர் திருவிதாங்கூர் பத்மநாதபுரத்தில் நீலகண்ட சுவாமி கோயில் அலுவலராக இருந்தார். இளம் வயதிலேயே திருமுறைகளைப் படிப்பதில் சுப்பிரமணியன் ஆர்வம் காட்டினார். முத்து தாண்டவரின் கீர்த்தனைகளைப் படித்தார். பஜனைப் பாடல்கள் பாடுவதிலும், சொற்பொழிவு நிகழ்த்துவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
அனந்தபத்மநாப சுவாமி கோயில் அருகே அமைந்துள்ள கரமனையைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணை சுப்பிரமணியனுக்கு மணம் முடித்தனர். நான்கு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர்.
Advertisement
Advertisement
ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்ததால், அவருக்கு இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்தது. பத்மநாதபுரம் கோயில் வாகன கொட்டகையில் கடும் தவம் புரிய, அவருக்கு இறையருள் கிட்டியது. இதன்பின்னர், 'திருநீலகண்ட தசகம்' பாடியதால் இவரை 'நீலகண்ட சிவன்' என்று அழைக்கப்பட்டார்.
குடும்ப வற்புறுத்தலால், சிறிது காலம் சட்டத்துறையில் கிராம நடுவராக பணியாற்றினார். ஒருமுறை கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அழுத்தங்கள் அவருக்குத் தரப்பட்டது. இதனால் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
ஆன்மிகத்தில் தீவிரமாக ஈடுபட்ட அவர், தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பழைமையான கோயில்களில் பாடல் பாடி வழிபட்டு வந்தார். கரமனை அக்கிராஹாரத்தில் உள்ள இன்றைய சாரதா மடத்தின் வீட்டிலும் , புலி மேடு தெரு வீட்டிலும் நீலகண்ட சிவன் குடியிருந்து வந்தார். கிருஷ்ணன் கோவில் இடதுபுறம் சொந்தமாக இடம் வாங்கி, அங்கு வீடு கட்டி பாடுவதற்கும் பஜனைகள் செய்வதற்கும் பயன்படுத்தினார்.
உலகநல்லூர் சுந்தரசுவாமிகள் எனும் இசைஞானியோடு நீலகண்ட சிவனுக்கு நட்பு ஏற்பட்டு, இசையில் தீவிரமாக ஈடுபட்டார். இவரின் இசைஞானத்தை திருவிதாங்கூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை சமஸ்தானங்கள் பாராட்டின.
ஒருமுறை திருவிதாங்கூர் மன்னர் முன்னிலையில் நடைபெற்ற இசைக் கச்சேரியில், 'முடி சூடும் மன்னனும் முடிவில் ஒரு பிடி சாம்பல்' என்று அடி இடம்பெறும் பாடல் அமைந்தது. இதைக் கேட்டதும் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தாலும், அவருக்கு மன்னர் பரிசுகளை வழங்கினார். அந்தப் பரிசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களுக்கே அளித்துவிட்டார். இவரது இல்லத்துக்கு சுவாமி விவேகானந்தர் வருகை தந்ததும், இருவரும் ஒன்றாகச் சொற்பொழிவு ஆற்றியதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்' என்கிறார் கணேஷ்.
ஸ்ரீநீலகண்ட சிவன் சங்கீத சபா அறக்கட்டளை அறங்காவலர் பார்வதிபுரம் பத்மநாப ஐயர்: 'விஸ்வநாதபுரம் கோயிலில் தண்ணீர் விட்டு விளக்கெரியச் செய்தது, திருநெல்வேலி அருகேயுள்ள கருங்குளத்தில் மழையின்றி மக்கள் வாடியபோது, பதிகம் பாடி பலத்த மழை பொழியச் செய்தது, நோய்வாய்ப்பட்டு அல்லலுற்ற ஒருவரை பஞ்சாட்சர மந்திரம் பாடி குணப்படுத்தியது உள்ளிட்ட பல அற்புதங்களை நீலகண்ட சிவன் நிகழ்த்தியுள்ளார்.
இலங்கையில் உள்ள கதிர்காம கந்தனை தரிசிக்க விரும்பியது நிறைவேறாமல் போனபோது வருத்தப்பட்டார். அன்றிரவே கதிர்காம கந்தன் நீலகண்ட சிவனுக்கு கனவில் தரிசனம் அளிக்க, அதை அவர் பாடலாகவும் பாடியிருக்கிறார்.
இறைவனை நம்பி வாழ்கின்ற உண்மையான பக்தர்களுக்கு நல்லதே நடக்கும் என்றெல்லாம் நீலகண்ட சிவன் உபதேசித்துள்ளார். பதிகங்கள், அஷ்டகம், கண்ணி, அந்தாதி முதலான வெவ்வேறு விதமான பாடல்களையும் ஸ்ரீநீலகண்ட சிவன் பாடியிருக்கிறார்.
1900- ஆம் ஆண்டு ஆனி மாதம் திங்கள்கிழமை பிரதோஷ நாளில் தியானத்தில் அமர்ந்தபடியே நீலகண்ட சிவன், பூலோக வாழ்க்கையை நிறைவு செய்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை கேரளப் பேராசிரியர் மா.நயினார் ஆதாரங்களோடு எழுதி நூலாக்கியுள்ளார்.
இவரின் நினைவைப் போற்றும் வகையில், திருவனந்தபுரம் கரமனையில் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் இவரின் சமாதி நாளையொட்டி, கரமனை ஸ்ரீசத்தியவாகீஸ்வரர் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் அறக்கட்டளையின் சார்பில் ஆராதனை விழா நடைபெறுகிறது. குரு பூஜை விழா ஜூலை 26-இல் நடைபெறுகிறது.
இந்த சபை தொடங்குவதற்கு முன்னின்று செயல்பட்டவர் வேணுகானம் ஜனார்த்தன ஐயர். சபா வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் இன்றைய சபா தலைவர் சி.வி. கிருஷ்ணமூர்த்தி' என்கிறார் பத்மநாப ஐயர்.
(51-ஆவது ஆராதனை விழா ஜூலை 22 - ஆகஸ்ட் 2)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.