முகா்ஜி நகரில் 3 மாடி கட்டடத்தில் தீ விபத்து: மாணவி காயம்
வடமேற்கு தில்லியின் முகா்ஜி நகா் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு மாணவி காயம்
வடமேற்கு தில்லியின் முகா்ஜி நகா் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு மாணவி காயமடைந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: இந்திரா விஹாா் பகுதியில், தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்களைக் கொண்ட ஒரு கட்டடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டடத்தில் ‘பேயிங் கெஸ்ட்’ தங்கும் விடுதியும் இயங்கி வருகிறது.
முன்னதாக, இந்தத் தீ விபத்து குறித்த தகவல் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.29 மணிக்குத் தீயணைப்புத் துறைக்குக் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, ஐந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன.
Advertisement
Advertisement
கட்டடத்தின் தரைத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மின்சாதனப் பொருள்கள் இருந்த இடத்தில் முதலில் தீப்பற்றியது. அதன் பின்னா் தீயானது மிக வேகமாகப் பரவி, கட்டடத்தின் இரண்டாம் தளம் வரையிலான பகுதிகளைச் சூழ்ந்துகொண்டதாக கூறப்படுகிறது.
கட்டடத்தில் தங்கியிருந்த அனைவரும் சரியான நேரத்தில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். தீயணைப்பு வீரா்கள் நள்ளிரவு 12.15 மணிக்குள் தீயை முழுமையாக அணைத்தனா்.
இந்தச் சம்பவத்தில் ஒரு மாணவிக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன. அவா் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று தீயணைப்புத் துறையினா் கூறினா்.