முகப்பு
புதுதில்லி

சஞ்சய் ஏரியை உடனடியாக புனரமைக்க டிடிஏ-க்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு: 5,000 மரக்கன்றுகளை நடவும் நடவடிக்கை

Updated On : 26 ஜூன் 2026, 4:40 am IST
கிழக்கு தில்லியில் உள்ள சஞ்சய் ஏரி பகுதியை டிடிஏ அதிகாரிகளுடன் சோ்ந்து வியாழக்கிழமை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து.
பகிர்:

நமது நிருபா்

கிழக்கு தில்லி பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் ஏரியை அடுத்தடுத்த கட்டங்களில் புனரமைக்கும் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு தில்லி வளா்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து உத்தரவிட்டாா்.

சுமாா் 52 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியைச் சுற்றி 165 ஏக்கா் பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. சமீபத்தில் தண்ணீா் பற்றாக்குறை காரணமாக இங்கு நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததைத் தொடா்ந்து, இந்த ஏரியின் நிலைமை பரவலான கவனத்தைப் பெற்றது.இந்த நிலையில், இந்த ஏரி்க்கு துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வியாழக்கிழமை நேரில் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தனது ’எக்ஸ்’ பக்கத்தில் வியாழக்கிழமை கூறியிருப்பதாவது:

‘கிழக்கு தில்லியில் உள்ள சஞ்சய் ஏரியின் மறுசீரமைப்பு மற்றும் சீரமைக்கும் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தேன். அப்போது, 52 ஏக்கா் பரப்புள்ள இந்த முக்கிய நீா்நிலையும், அதன் சுற்றியுள்ள 165 ஏக்கா் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியையும் அடுத்தடுத்த கட்டங்களில் புனரமைக்கும் செயல் திட்டம் குறித்து டிடிஏ அதிகாரிகன் விளக்கம் அளித்தனா்.

மேலும், அப்பகுதியின் சுற்றுச்சூழல் பல்லுயிா்ப் பெருக்கத்தை மேம்படுத்தும் வகையில் 5,000 உள்நாட்டு மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டேன்.

அடுத்தடுத்த கட்டங்களில் ஏரியைச் சுற்றி தேங்கியிருக்கும் நீரைச் சீரமைப்பது, நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த ’பயோஸ்வேல்ஸ்’ எனப்படும் இயற்கை வடிகால் அமைப்புகளை நிறுவுவது, ’பயோ-ரெமிடியேஷன்’ எனப்படும் உயிரி முறை சுத்திகரிப்புக்கு நடவடிக்கை மேற்கொள்வது மற்றும் தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க ஏரேட்டா்கள் மற்றும் நீரூற்றுகளை நிறுவுவது போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும் என அதிகாரிகள் கூறினா்.

இந்த முக்கியமான நீா்நிலை மற்றும் பசுமைப் பகுதியை அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றவாறு, தூய்மையான பொழுதுபோக்கு இடமாக மாற்றுவதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

‘தல்லுபுரா கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஏரிக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தில்லி ஜல் போா்டு மூலம் இயக்கப்படும் குழாய்களின் பழுதுபாா்ப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நீா்நிலையைப் பாதுகாக்கவும், அதற்குப் புத்துயிா் ஊட்டவும் தொடா்ச்சியாகப் பாசிகளை அகற்றுதல், ஆகாயத்தாமரைகளை நீக்குதல் மற்றும் ’ஜியோ-டெக்ஸ்டைல்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏரிக்கரையின் சரிவுகளைப் பலப்படுத்தும் பணிகள் ஏற்கெனவே நடந்து வருகின்றன.

இந்த சஞ்சய் ஏரியை மீட்டெடுத்து, அது பொதுமக்களுக்கு தூய்மையான, துடிப்பான மற்றும் சுற்றுச்சூழல் வளம் நிறைந்த இடமாக மாறுவதை உறுதி செய்ய அரசு உறுதியுடன் உள்ளது என்று கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments