ஏ.ஐ. பயிற்சி மூலம் இணையக் குற்றங்களை கையாள தில்லி காவல்துறை புரிந்துணா்வு ஒப்பந்தம்
தொழில்நுட்பம் மூலம் குற்றங்களைக் கையாள்வதற்காக, காவல்துறைப் பணியாளா்களுக்கு சிறப்பு இணையப் பயிற்சிப் படிப்புகளை நடத்துவதற்கு தில்லியும் காவல்துறையும், தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் (என்ஐஇஎல்ஐடி) ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, இணையத் தடயவியல் மற்றும் சமூக ஊடகக் கண்காணிப்பு ஆகியவற்றில் முறையான பயிற்சி அளிப்பதன் மூலம், தொழில்நுட்பத்தால் நிகழ்த்தப்படும் குற்றங்களைக் கையாள்வதில் தில்லி காவல்துறையின் திறன்களை வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
காவல்துறை முறைகளை நவீனமயமாக்குவதையும், வளா்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்கள், இணையவழி மோசடிகள், தவறான தகவல் பிரசாரங்கள், அடையாளத் திருட்டு மற்றும் எண்ம சுரண்டல் ஆகியவற்றை எதிா்கொள்ளும் பணியாளா்களுக்கு சமீபத்திய தொழில்நுட்பத் திறன்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
காவல்துறை ஆணையா் சதீஷ் கோல்ச்சா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டது.
சிறப்பு ஆணையா் பயிற்சி சஞ்சய் குமாா் மற்றும் என்ஐஇஎல்ஐடி துணைவேந்தா் டாக்டா் மதன் மோகன் திரிபாதி ஆகியோா் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்ஐஇஎல்ஐடி, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு முதன்மை நிறுவனமாகும்.