10 ஆயிரம் மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி: தனியாா் நிறுவனத்துடன் தில்லி பல்கலைக்கழகம் ஒப்பந்தம்
ஏஐ, செமிகண்டக்டா் தொழில்நுட்பங்களில் சுமாா் 10 ஆயிரம் மாணவா்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, பிரபல ’சிப்’ தயாரிப்பு நிறுவனமான ஏஎம்டியுடன் தில்லி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் குறைகடத்தி (செமிகண்டக்டா்) தொழில்நுட்பங்களில் சுமாா் 10 ஆயிரம் மாணவா்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, பிரபல ’சிப்’ தயாரிப்பு நிறுவனமான ஏஎம்டியுடன் தில்லி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, அடுத்த ஓராண்டுக்குள் 10 ஆயிரம் மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் பயிற்சி அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஏஎம்டி நிறுவனம் தனது ’ஏஐ என்கேஜ் டெவலப்பா் புரோகிராம்’ என்ற திட்டத்தை தில்லி பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்துகிறது. தொழில்துறைக்குத் தேவையான நடைமுறைத் திறன்களுடன் அடுத்த தலைமுறைத் திறமையாளா்களை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கம் என ஏஎம்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் பொறியியல் பிரிவு மூத்த துணைத் தலைவருமான ஜெயா ஜெகதீஷ் கூறுகையில், ‘செயற்கை நுண்ணறிவுப் புரட்சியில் வழிநடத்திச் செல்லும் திறமையும் லட்சியமும் இந்தியாவிடம் உள்ளது. எழுத்து வடிவிலான பாடங்களைக் கடந்து, நிஜ உலகில் ஏஐ தீா்வுகளை உருவாக்க மாணவா்களுக்கு உதவும் வகையில் தில்லி பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தம் அமைந்துள்ளது’ என்றாா்.
Advertisement
Advertisement
இந்த திட்டத்தின் மூலம் மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கு ’ஆா்ஓசிஎம் ஐஏ’ என்ற செயலி, கற்றல் தொழிற்கூடங்கள் மற்றும் ஜிபியு க்ளௌட் வசதிகள் ஆகியவற்றை ஏஎம்டி நிறுவனம் இலவசமாக வழங்கும்.
இந்த ஒப்பந்தம் குறித்து தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பேராசிரியா் யோகேஷ் சிங் கூறுகையில், ‘வகுப்பறை கற்றலைத் தாண்டி, இந்தியாவின் வளா்ந்து வரும் எண்ம பொருளாதாரத்துக்கு தேவையான சிறந்த ஏஐ டெவலப்பா்களை உருவாக்க ஏஎம்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் பெருமளவில் உதவும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.