அமுதன் அடிகள் வாழ்வும் பணியும்
அமுதன் அடிகள் வாழ்வும் பணியும் (ஆய்வு நூல்) - நெய்தல் யூ அண்டோ; பக். 156; ரூ.140; அம்மா பதிப்பகம், தூத்துக்குடி-1; ✆ 99408 67562.
தமிழ்நாட்டில் முத்துக்குளித்தலுக்கு சிறப்புப் பெற்ற ஏழு ஊர்களில் ஒன்று புன்னைக்காயல். போர்ச்சுகீசியர் இங்கு வந்து தங்கிதான் முத்துக்குளித்தலில் ஈடுபட்டனர் என்று தனது சொந்த ஊரான 'புன்னைக்காயல் வரலாற்று நூலில்' அமுதன் அடிகள் எழுதியுள்ளார்.
அமுதன் அடிகளின் இறைபணிப் ஐம்பதைக் கணக்கிட்டு, இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது. அவர் தஞ்சாவூர் மற்றும் ரோம் நகரில் கல்வி கற்றது, 'வாடிகன் வானொலி'யில் தமிழ் அறிவிப்பாளராகவும், அச்சகப் பணி மேற்கொண்டதையும் நூலாசிரியர் பதிவிட்டிருக்கிறார். தமிழ்நாடு வந்ததும், தஞ்சை மறைமாவட்டத்திலும், திருச்சி, வேளாங்கண்ணி உள்ளிட்ட ஊர்களில் ஆற்றிய திருஆலயப் பணிகளும் ஆராய்ச்சிப் பணிகளும் விளக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கிறிஸ்தவத் தமிழறிஞர் ஆண்டிறீக்கி பாதிரியாரின் மொழிபெயர்ப்பு குறித்த கட்டுரையை தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டிலும், கோவை செம்மொழி மாநாட்டில் 'சமயங்கள் வளர்த்த தமிழ்' அரங்கில் 'கிறிஸ்தவம் வளர்த்த தமிழ்' கட்டுரையையும், சிகாகோவில் உலகத் தமிழ் மாநாட்டில் அந்தாம் தே ப்ரொய்ன்தா அடிகளாரின் 'தமிழ்அகர முதலி' தொகுப்பு குறித்தும் கட்டுரை வாசித்ததன் மூலம் சிறப்பான கவனம் பெற்றதும் கூறப்பட்டுள்ளது.
சர் ஏ.டி.பன்னீர்செல்வம், வீரமாமுனிவர் குறித்த இரு நூல்கள், தனிநாயக அடிகள், குன்றக்குடி அடிகள், வள்ளலாரின் ஆன்மநேய நூல்கள் என 9 ஆராய்ச்சி நூல்களைப் படைத்திருக்கிறார். தெய்வீகப் பணி, ஆராய்ச்சி, இலக்கியப் பணி ஈடுபாடுகளை அறிய உதவும் நல்லதொரு நூல்.