FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

சிந்தா நதி (இளமை நினைவுகள்- தன் வரலாறு)

1980-களில் 'தினமணி கதிரில்' தொடராக லா.ச. ராமாமிருதம் எழுதி வெளிவந்த தன் வரலாற்றுப் பதிவுகளின் நூல் வடிவம்.

Updated On : 27 ஜூலை 2026, 3:33 pm IST
பகிர்:

சிந்தா நதி (இளமை நினைவுகள்- தன் வரலாறு) - லா.ச. ராமாமிருதம்; பக். 248; ரூ. 300; முல்லைப் பதிப்பகம், சென்னை -600 040. ✆ 98403 58301.

1980-களில் 'தினமணி கதிரில்' தொடராக லா.ச. ராமாமிருதம் எழுதி வெளிவந்த தன் வரலாற்றுப் பதிவுகளின் நூல் வடிவம். லா.ச.ரா.வுக்கு எப்போதுமே ஒரு தனி மொழி, அதுவும் தன்னைப் பற்றியே அவர் எழுதும்போது எழுத்துகள் யாவும் கவிதைகளாகவும் தத்துவங்களாகவும் பொங்கிப் பிரவாகம் எடுக்கின்றன.

சிறு வயது நினைவுகளில் தொடங்கி, பணி ஓய்வுக் காலம் வரையிலும் தனிச்சிறப்பு மிக்க பல்வேறு விஷயங்களைச் சிந்தா நதியெனப் பதிவு செய்துள்ளார். தாயையும் தந்தையையும் எழுதும் இடங்களில் உணர்ச்சிப் பிழம்பாகி நெகிழ்ந்துவிடுகிறார் லாசரா- 'அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா, என் அம்மா. தனித்தனி அம்மாக்கள் கிடையாது, ஒரே அம்மா'.

Advertisement

Advertisement

லலிதா சகஸ்ரநாமம் படிக்கிறேன் என்று தொடங்கி, பக்தி பொங்குமளவுக்கு மனம் களங்கமற்று இல்லை, இருக்கப் போவதுமில்லை என்கிறார் இயல்பாக.

தெய்வம் மனுஷ்யரூபேண; இந்த நடுத்தரக் குடும்பம் இருக்கிறதே, இதற்கு விமோசனம் கிடையாது; உள்ளே ஒரு சக்தி அலை எழும்பியதைக் கிணறு பொங்கின மாதிரி என்கிறவர், யாராயிருந்தாலும் கொண்டாடிக் கொண்டேயிருந்தால்தான் உறவு என்று ஒரே வாழ்வனுபவச் சித்திரங்கள்தான்.

நண்பர் மாசு பற்றி எழுதியிருப்பவை நெகிழ்ச்சி. அவருடைய பெட்டியின் கதையும் அதில் கிடைத்த நேர்த்தியின் விதிகளும் இவற்றை ஓரளவேனும் கடைப்பிடித்து, இவற்றுக்குள் அடங்கினால், ஓரளவேனும் உன் உள் செளந்தர்யத்தைக் காண்பாய் என்பதுவும், தன்மானத்தில் நாய்க்கும் பூனைக்குமான சண்டையின் உக்கிரத்துடன், மனிதனாவது, மிருகமாவது, மரமாவது! உயிரின் அடிப்படை வனவாடை என்றதுடன் பூனையின் கெளரவத்தை மெச்சுகிறார்.

மொட்டை மாடியில் வேப்ப மரத்திலிருந்து ஜமக்காளம் விரித்தாற் போன்று உதிர்ந்திருந்த பூ, இலை, சருகு, செத்தை... குற்றங்கள் செய்யாதவன் இல்லை, குற்றங்கள் பல அறியாமலே நேர்கின்றன, இழைக்கப்படுகின்றன... சிங்கத்துக்குப் பல் தேய்ந்து போனால், நகம் இற்றுப் போனால், எலிகள் ஓடிவிளையாடக் கேட்பானேன்? - லா.ச.ரா. வரிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

மணிக்கொடி சதஸ்ஸில் ஒருவித அச்சத்துடன் லா.ச.ரா. ஒதுங்கியிருக்க ந. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா, புதுமைப்பித்தன், கு.ப.ரா., க.நா.சு., சிட்டி, தி.ஜ.ர., பி.எஸ். ராமையா எல்லாரும் வருகிறார்கள். எர்ரபாலு செட்டித் தெருவில் 'ஊம், நீங்களும் நம்மவருடன் சேர்ந்தாச்சு' என்ற புதுமைப்பித்தனின் அங்கீகார வரியைக் குறிப்பிடும்போது படிப்பவரையும் தொற்றுகிறது அவரது மகிழ்ச்சி. சிந்தா நதி உணர்வுகளின் கடல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments