தேன் சொட்டும் அகநானூறு
'காதல்தான் வாழ்வு. அதில் முழுவதுமாக மூழ்கியவன் நெறியான வாழ்வு வாழ்வான்' என்றுரைக்கும் உரையாசிரியர், 'முழுமைபெற்ற காதல் எல்லாம் முதுமைவரை கூட வரும்' என்ற கண்ணதாசனின் வரிகளையும் மேற்கோள் காட்டுகிறார்.
தேன் சொட்டும் அகநானூறு-உரையாசிரியர் அ. சுப்ரமணியன்; பக். 622; ரூ. 850; துளசி பதிப்பகம், மதுரை-625 016, ✆ 94431 60823.
செம்புலப் பெயல் நீர் போல- காதலும் வீரமும் கலந்த செம்மையான வாழ்வு சங்கத் தமிழருடையது. அவர்களின் காதல் கவியும் அக வாழ்வியலை அழகியலுடன் எடுத்தியம்பும் அகநானூறு பாடல்களில் 103 பாடல்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன.
ஐந்திணைகளில் இருந்தும் நன்கு தெரிவு செய்யப்பட்ட பாடலடிகள் என்பதாலும், அந்தப் பாடல்களுக்கு துல்லியமான அடி நேர் உரை, விளக்கம், நயமான உவமை, காட்சி விரிவாக்கம், உள்ளுறை, புலவர் வரலாறு என அனைத்தும் தனது நுண்மான் நுழைபுலத்தால் எளிய நடையில் உரையாசிரியர் தந்திருப்பதாலும் 400 பாடல்களையும் சுவைத்த நிறைவு கிடைத்துவிடுகிறது. பாடலடிக்கு ஒத்த கருத்தமைந்த திரைப்பாடல்களை இணைத்திருப்பது தனிச்சிறப்பு.
Advertisement
Advertisement
காதலியின் அழகை தலைவன் தனது தோழனிடம் கூறுமிடத்து (பாடல் 130)... வண்டு வந்து திறக்கும் நெய்தல் மலரையே தோற்றுப் போகச் செய்யும் அவளது கண்கள்; அந்த கண்களைக் கொண்ட முகமோ களிப்புறும் காதல் ஒளிரும் முகம்... என வர்ணிப்பதை 'பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை. என்னென்று நான் சொல்லலாகுமா?' என்ற திரைப்படப் பாடலை பொருத்தமாக இணைக்கிறார் உரையாசிரியர்.
பாடலடிகளுக்கான இயற்கைச் சூழல், தலைவன், தலைவி சந்திப்பு, தோழியின் தூது போன்றவை நுட்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பக்கங்களில் ஊடாக, காட்சியமைப்புக்கான படங்களும் இணைக்கப்பட்டிருப்பது கவனம் ஈர்க்கிறது.
'காதல்தான் வாழ்வு. அதில் முழுவதுமாக மூழ்கியவன் நெறியான வாழ்வு வாழ்வான்' என்றுரைக்கும் உரையாசிரியர், 'முழுமைபெற்ற காதல் எல்லாம் முதுமைவரை கூட வரும்' என்ற கண்ணதாசனின் வரிகளையும் மேற்கோள் காட்டுகிறார்.
அறம் பிறழா வாழ்வியலுக்கு அகநானூறு இன்றைக்கும் அவசியம் என்பதை உணர்த்தும் உரையாசிரியர், அதை இளம் தலைமுறையினரும் புரியும் வகையில் எளிதாகக் கொண்டு சேர்க்கும் தனது இலக்கை எட்டியுள்ளார்.
அகநானூறு தேன் சொட்டவில்லை; மாறாக, பொழிந்து வழிகிறது...!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.