ஆடி மாதம் முழுவதும் மூடப்படும் அதிசய அம்மன் கோயில்... காரணம்?
ஆடி மாதத்தில் மூடப்படும் தமிழ்நாட்டின் அரிய அம்மன் கோயில் பற்றி..
ராமநாதபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ உமையநாயகி அம்மன் கோயிலில் ஆடி மாதம் முழுவதும் கோயிலின் நடை அடைக்கப்படுமாம் ஏன்? என்ன காரணம் எனத் தெரிந்துகொள்வோம்.
அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. பல்வேறு அம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், முளைப்பாரி, கூழ் வார்த்தல், தீ மிதித்தல் எனக் கொண்டாட்டங்கள் சொல்லிக்கொண்டேபோகலாம். ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் திருவிழாக்கோலம் களைக்கட்டும்.
ஆனால், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த எஸ். தரைக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ உமையநாயகி அம்மன் கோயிலில் மட்டும் ஆடி மாதம் முழுவதும் கோயிலின் நடை சாத்தப்படுவது ஒவ்வொரு ஆண்டும் நடை சாத்தப்படுவது வழக்கமாம்.
Advertisement
Advertisement
சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் பழமையும் புராதன சிறப்பையும் பெற்ற ஸ்ரீ உமையநாயகி அம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் உமையநாயகி அம்மன் கோயிலில் மேற் கூரையின்றி அருள்பாலிக்கிறார்.
ஒவ்வொரு வருடமும் அடி மாதம் தொடங்குவதற்கு முதல் நாள் மூலவர் அம்மனுக்கு 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டு, பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முழுவதும் மூலஸ்தானம் மற்றும் பிரகாரம், மண்டபம் பூட்டி வைக்கப்படுவது வழக்கம். அன்றைய நாள்களில் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. ஆடி மாதத்திற்குப் பின்னர் ஆவணி முதல் நாளில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.
என்ன காரணம்?
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இந்நிகழ்வு கோயிலில் நிகழ்த்தப்படுகிறது. அனைத்து கோயில்களில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படும் நிலையில், இதற்கு விதிவிலக்காக ஸ்ரீ உமையநாயகி அம்மன் கோயிலில் மட்டும் இந்த சடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆடி மாதம் முதல் நாளில் உமையநாயகி அம்மன் ராமேஸ்வரம் சென்று அங்கு அக்னித் தீா்த்தம் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, திரும்ப ஆவணி மாதம் முதல் நாள் கோயிலுக்குத் திரும்புவதாக ஐதீகம். எனவே, ஆடி மாதம் முழுவதும் கோயில் நடை சாத்தப்பட்டு, ஆவணி மாதத்தின் முதல் நாளில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
இந்தக் கோயில் எஸ்.தரைக்குடி கிராமத்தில் அமைந்திருந்தாலும் இது பல்வேறு கிராமத்தினருக்குக் குலதெய்வமாக இருந்து வருகிறது. உமையநாயகி அம்மன் கோயில் அருகே பழைமையான மரங்கள், உயரமான கட்டடங்கள் இருந்தாலும் கூட மூலவரான அம்மன் மேற்கூரையின்றி திறந்த வெளியில் வீற்றுள்ளார் என்பது இக்கோயிலின் சிறப்பாகக் கருதப்படுகிறது.
The doors of the Sri Umaiyanayaki Amman Temple in Ramanathapuram remain closed throughout the month of Aadi. Let us find out the reason behind this.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.