சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 1. சந்திரன்
சென்னையைச் சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - சந்திரன்சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களில்
சந்திரன் பரிகார ஸ்தலம்: சோமங்கலம் ஸ்ரீ சோமநாதேஸ்வரர் (முதல் பரிகார திருத்தலம்)
சென்னையை அடுத்த தாம்பரம் வழியாக கிஷ்கிந்தா செல்லும் வழியில் சோமங்கலம் எனும் இடத்தை அடையலாம். இதற்கு அருமையான மாற்று வழி என்றால், பல்லாவரத்தில் இருந்து குன்றத்தூர் அடைந்து அங்குள்ள இடது பக்க வழியில் சென்றாலும் சோமங்கலத்தை அடையலாம். இது ஒரு 10 கி.மீ தூரம் இருக்கும். இங்கு ஒரு பழமையான ஒரு சிவன் கோவில் உள்ளது. சிவனின் பெயர் சோமநாதேஸ்வரர். தாயார் பெயர் ஸ்ரீ காமாக்ஷி அம்மன்.
தக்க்ஷனின் சாபத்துக்கு உள்ளான சந்திரன், தமது 16 கலைகளுடன் கூடிய தெய்வீகப் பொலிவை இழந்தான். இங்கு ஒரு குளத்தை உருவாக்கி அவன் சிவ வழிபாடு செய்தான். அதன் பிறகு சந்திரன் தனது சுய பொலிவைப் பெற்றான். சந்திரன் (வேறு பெயர் சோமன்) வழிபட்ட சிவன் ஆகையால் இங்குள்ள சிவன் சோமநாதேஸ்வர் எனும் பெயர் பெற்றார். மேற்கு நோக்கி இங்கு சந்திரன் அமைந்துள்ளார். இவர் இங்கு எந்தவகையான சந்திரன் தோஷம் அடைந்தவர்களுக்கும் பரிகார தலமாக இருந்து அருள்பாலிக்கிறார். இங்குள்ள கல்வெட்டின் மூலம், இந்தக் கோயிலை கி.பி 1073இல் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது என்பதனை அறிகிறோம். இது அந்தக் காலத்தில் வரி இல்லாமல் அங்கு வாழ்ந்த அந்தணர்களுக்கு, பரிசாக அளிக்கப்பட்டது, அதனாலேயே இது சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
பிறகு இங்கு வாழ்ந்த சோமகாந்தன் எனும் ஒரு அரசன் தனது நாட்டை சுற்றி 108 சிவன் கோவிலை நிர்மாணிக்க எண்ணி இந்த கோவிலை மையமாக வைத்துக் கட்டத்துவங்கினான். அப்போது இவனின் எதிரிகள் இவன் நாட்டின் மீது படை எடுத்து வந்தனர். இதனை இவன் எதிர்கொள்ள முடியவில்லை ஏனெனில் இவன் போருக்கான ஆயத்தம் ஆகாத நிலையிலிருந்தான். கூடவே இவன் கோயிலைச் சுற்றி தமது வீரர்களை நிறுத்திவைத்துக் காக்க மனம் கொண்டான். எனவே அவன் சிவனை நினைத்து உருகி வேண்டி இவனின் கோயில் நிர்மாண வேலையைக் காக்கச் செய்தான். சிவபெருமான், நந்தியெம் பெருமானுக்கு கட்டளை இடவே அவரும் கிழக்குப் புறமாகத் திரும்பி, தனது வலிய பெரும் மூச்சுக்காற்றால், எதிரிகளை ஓடச்செய்தார். சிவனாரும் நந்தியை அப்படியே கிழக்கு நோக்கி இருக்க ஆணை இட நந்தியும், மாற்றாக, இன்றும் அப்படியே கிழக்கு நோக்கியே உள்ளார். அதன் பிறகு அவன் நாட்டின் மீது யாரும் படையெடுத்து வரவில்லை.
அம்பாள், தெற்கு நோக்கி காமாக்ஷி எனும் பெயருடன் காட்சி தருகிறாள். இங்குள்ள நடராஜர் வேறு எங்கும் காண இயலாத வடிவமான, சதுர் தாண்டவ மூர்த்தியாகக் காட்சி தருகிறார். சோழர் காலத்து வடிவமைப்பாகிய தூங்கும் யானையின் பின்பக்க வடிவநிலை ஒத்து இருப்பது இதன் கோபுர நிலையாகும். அதற்கு கஜ ப்ருஷ்ட்டம் என்பர். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ மஹாவிஷ்ணு, ஸ்ரீ துர்கை மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் போன்றோரை வெளிப்பிரகாரத்தில் காண முடியும்.
ஸ்ரீ வள்ளி தேவா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் மற்றும் ஸ்ரீ பைரவர் தனி சன்னதி கொண்டு விளங்குகின்றனர். இந்த ஸ்தலத்தின் ஸ்தல விருக்ஷமாக சரக்கொன்றை மரம் கோயிலின் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இதன் கீழ் ஒரு சிறிய அளவிலான ஒரு சிவலிங்கம் உள்ளது. அது விருக்க்ஷ லிங்கம் என அழைக்கப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் சப்தமாதாக்கள் அமைந்துள்ளனர். இங்குள்ள தீர்த்தத்தின் பெயர் சண்டீஸ்வரரால் உருவாக்கப்பட்ட, சண்டீஸ்வர தீர்த்தம் உள்ளது. இந்த கோயில் கண்டிப்பாக பகல் 12 மணி முதல் மாலை 04 மணி வரை மூடப்பட்டிருக்கும். கோயிலை நேசிப்பவர்களுக்கு இந்த அழகான கோயிலில் நிறையவே உள்ளது. ஏன் முதலில் சந்திரன் கோவிலை எடுத்துள்ளேன் என்றால், கோயிலைச் சென்று வர வேண்டும் என/மனம் எண்ணம் வரவேண்டும் என்பதாலேயே சென்னையைச் சுற்றியுள்ள, தமிழ்நாடு (முன்பு தொண்டை நாடு என அழைக்கப்பட்டது) மனோகாரகனாகிய சந்திரன் ஸ்தலத்தைப் பற்றி எழுதத் தொடங்குகிறேன்.
இனி அடுத்து வரும் தொடர்களில் மற்ற கோயில்களைப் பற்றியும் வெளிவரும்.
சாயியைப் பணிவோம் எல்லா நலமும் பெறுவோம்.
- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்
தொடர்புக்கு: 98407 17857
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.